மதுரை, ஜன.11- 2019 ஆம் ஆண்டில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் ஏஜெண்டாக செயல் பட்ட இருவருக்கு கடும் நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமீன் வழங்கியுள்ளது. மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்த விவகாரத்தில் ஜாமீன் கோரி ரகுவன்ஷ் மணி, சகேட் குமார் சிங் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “ 2019 ஆம் ஆண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர், நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏஜன்டாக செயல்பட்டதாக அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டோம். இந்த வழக்கில் நாங்கள் இருவரும் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டோம். வழக்கு விசாரணையின் பெரும்பகுதி முடிவடைந்த நிலையில், இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். அதற்கு நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம்” என்று தெரிவித்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு புதனன்று நடைபெற்றது.
“மனுதாரர்கள் இருவருமே மாணவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் தேர்வு எழுத துணை செய்துள்ளனர். விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்க கூடாது” என்று அரசுத்தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து நீதிபதி, “இருவரும் மதுரையில் தங்கியிருந்து துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தினமும் காலை 10:30 மற்றும் மாலை 05:30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டுகளை வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் இல்லையெனில் உரிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். ஆதார் அட்டையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். தலைமறைவாகவோ, சாட்சிகளை கலைக்கவோ கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார்.