states

பாமரனுக்கு ஒரு சட்டம், முதலாளிகளுக்கு ஒரு சட்டம் உள்ளதா?

மதுரை, மார்ச் 15-  பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக வங்கிகள்  செயல்படுகின்றன என்று வேதனையை தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம் பெரும் முதலாளிகளுக்கு (ரிலையன்ஸ்) ஒரு சட்டம் என்று வங்கி விதிகளில் உள்ளதா?  கேள்வி எழுப்பினர். வங்கிக்கடன்,  வீட்டுகடன் , தொழிற்சாலை கடன் குறித்த வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் ,விக்டோரியா கெளரி அமர்வு புதனன்று  விசாரணைக்கு வந்தன. இதில் வங்கி வாடிக்கையாளர் பலர் தாங்கள் வங்கியில் வாங்கிய கடனுக்காக வங்கி விற்பனை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் பெயரில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் .மேலும் உரிய தொகையை கட்ட எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர் . இதனை விசாரணை செய்த நீதிபதிகள், வங்கிக்கு பல்வேறு கேள்விகளை சரமாரியாக எழுப்பினர். மேலும் வங்கிகள் தற்போது கடன் வாங்கி திரும்ப செலுத்தும்  வாடிக்கையாளர் கடன்  கேட்டால்  கொடுப்பதில்லை .மாறாக ஏமாற்றுவோருக்குத்தான் கடன் கொடுக்கப்படுகிறது.  இவர்களுடன் சேர்ந்து வங்கி மேலாளர்கள் செயல்படுகின்றனர். வங்கிகள் நியாயமாக செயல்படுவதில்லை. வாடிக்கையாளர்கள்  உதாரணமாக இரண்டு கோடி ரூபாய் கடன் கட்ட வேண்டும் என்றால் ரூ.20 லட்சம், 30 லட்சம் குறைத்துக் கட்டுகிறேன் என்றால் கூட வங்கி மேலாளர்கள் ஒத்துக் கொள்வதில்லை. அதே நேரம் தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் பாதி தொகையை கட்ட  முன்வந்தால் உடனடியாக ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு என தனி சட்டம் ஏதும் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.இவர்களுக்கு சாதகமாக  சட்டம் கொண்டு வர சிலர் உள்ளனர் என்று வேதனையை தெரிவித்தனர்.