states

போன மச்சான் திரும்பி வந்தான்

போன மச்சான்  திரும்பி வந்தான்  உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. மொத்த பால் உற்பத்தியில் 24 விழுக்காடு நம் நாட்டில் உற்பத்தி ஆகிறது. அதற்கு அடுத்தாற்போல் அமெரிக்காவும் சீனாவும் உள்ளன. ஆனாலும் இந்திய தேசிய கால்நடை வளர்ச்சிக் கழகம்(NDDB) பிரேசிலிலிருந்து கிர் இன பசுக்களின் 40000 டோஸ்கள் விந்துவை இறக்குமதி செய்ய உள்ளது. பிரேசிலில் பசுக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 40 லிட்டர்வரை பால் தருகின்றனவாம். சராசரியாக 20-22 லிட்டர் தரலாம். நம் நாட்டில் 8 லிட்டர்களே தருகின்றனவாம். எனவே பிரேசில் மரபணுக்களைக் கொண்ட பசுக்களை உருவாக்கி 80 லிட்டர் வரை பெற முடியுமா என்கிற ஆய்வில் என்டிடிபி இறங்கியுள்ளது. பிரேசில் காளை விந்துக்களை இறக்குமதி செய்தால் இந்திய பசு இனங்கள் அழித்துவிடும் என்று கூறி இந்திய நாட்டு மாடு வளர்ப்பவர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் கிர் அல்லது கைர் எனப்படும் இந்த இனங்கள் இந்தியாவில்தான் உருவானதாம். 18ஆம் நூற்றாண்டில் பவநகர் அரசர் இந்த வகை மாடுகளை பிரேசிலுக்கு அன்பளிப்பாக கொடுத்தாராம். பிரேசில் அவற்றை அசல் மாறாமல் பாதுகாத்தார்களாம். காலப்போக்கில் அவை அதிக பால் கொடுக்கும் இனமாக மாறியது. கடுமையான பருவ நிலைகளை சமாளிக்கும் திறமையும் கொண்டிருப்பதால் தென் அமெரிக்காவில் இவை பிரபலமானவை. அதே நேரத்தில் இந்தியாவில் விவசாயிகள் அதிக பால் கொடுக்கும் ஜெர்சி இன மாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்ததால் உள்நாட்டு மாடுகள் தொடர்ச்சியாக அழியத் தொடங்கின. கலப்பில்லாத ஜெர்சி பசுக்கள் 20 லிட்டரும் இந்திய இனங்களோடு கலப்பினம் செய்யப்பட்டவை 8-10 லிட்டர்களும் கொடுக்கின்றன. “விந்துக்களை இறக்குமதி செய்யும்போது பொருத்தமான விலங்குகள் தேவைப்படும். அதற்குப் பதிலாக கருவை இறக்குமதி செய்தால் அதிக வெற்றி கிடைக்கும்” என்கிறார் புது தில்லியிலுள்ள பிரேசில் நாட்டு வேளாண் அதிகாரி மவுரிசியோ.