பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை மாற்ற கந்தர்வகோட்டை எம்எல்ஏ கோரிக்கை
சென்னை,பிப்.13- தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (பிப்.13) கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சின்னதுரை, “கந்தவர்கோட்டை தொகுதியில் 40 ஆண்டு களுக்கும் மேலாக பல ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டங்கள் பழுதடைந்துள்ளன. குறிப்பாக, கந்தர்வகோட்டை ஊராட்சி, பழைய கந்தர்வ கோட்டை ஊராட்சி, புனல் குளம் ஊராட்சிகளில் பள்ளி கட்டடங்கள் மிக அவசர தேவையாக உள்ளது. ஆகவே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பழுதான கட்டிடங்களை மாற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டி கொடுக்க அரசு முன்வரவேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, உறுப்பினர் சின்னதுரையின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்”என்றார்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக் காலம் உடனடியாக ரத்தா?
ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊராட்சி, பேரூராட்சிகளை நகராட்சி, மாநகராட்சிகளுடன் இணைக்க கடந்த காலத்தில் தீர்மானங்கள் போடப்பட்டன. இது சம்பந்தமாக குழு அமைக்கப்பட் டுள்ளது. இந்த குழுவில் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றார். அப்போது பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி, நகராட்சி அருகே உள்ள ஊராட்சிகளை மாநகராட்சி நகராட்சிகளோடு இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஊராட்சி தலைவர்கள் ஒப்புதலோடுதான் இணைக்கப்படும் என்றார். மேலும், இப்போது உள்ள தலைவர்கள் பதவிக் காலம் முடியும் வரை இணைக்கப்படாது. பொதுமக்களிடம் கருத்து கேட்டு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் பதிலளித்தார்.
திருபெரும்புதூர் முதல் பூஞ்சேரி வரை புதிதாக சாலை
சென்னை, பிப்.13- சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை, தமிழ்நாட்டில் 36 விழுக்காட்டுக்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ள பகுதி திருபெரும்புதூர். ஆனால், அங்கு போக்கு வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய திட்டம் அரசிடம் இருக்கிறதா? என்றார். இதற்கு பதில் அளித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “புதிய திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் ஐந்து கட்டமாக பிரிக்கப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. அதன்பிறகு. புறவழிச்சாலை அமைத்துள் ளோம். திருவள்ளூரில் துவங்கி திருபெரும் புதூர், சிங்கப் பெருமாள் கோயில், மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமம் வரை இணைக்கும் திட்டம் செயல் பாட்டுக்கு வர உள்ளது. காரணம், திருபெரும் புதூர் முதல் சிங்கபெருமாள் கோவில் வரையிலும் அதிக தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. ஆனால், எங்கெல்லாம் நான்கு வழி சந்திப்புகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் பாலம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பாலங்கள் போட முடியுமா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். அந்த சாலை பணிகளுக்கு முதலமைச்சர் மிகவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்” என்றார்.