கடைசியாக அதைச் செய்துவிட்டார்கள். 2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது, தான் பிரதமரானால் முதல் நடவடிக்கையாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். அதற்குப் பிறகு அதைப் பற்றி அவர் சிந்திக்கக் கூட இல்லை. 10 ஆண்டுகள் கழித்து இப்போது மகளிர் மசோதாவை கொண்டுவந்திருக்கிறார். இந்த மசோதாவிற்காக நாடு 25 ஆண்டுகள் நீண்ட காலமாக காத்திருந்தது. 2010ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் இந்த மசோதா வந்த போது நான் அதற்கு ஆதரவாக வாக்களித்தேன். இந்த மசோதா எப்போது நிறைவேற்றப்பட்டாலும் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகுதான் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள் ளது. தொகுதி மறு வரையறை நடவடிக்கைகளும் நடந்த பிறகுதான் இது சாத்தியம் என்று அறிவித்துள்ளார்கள். இதற்கே 2029 ஆகிவிடும். இது 2024 தேர்தலுக்காக மோடி அவிழ்த்து விட்டிருக்கிற மற்றொரு ஜும்லா (தேர்தல் கால மோசடி வாக்குறுதி) என்பதே தவிர வேறு எதுவும் அல்ல. இன்னும் ஒரு தகவல் என்னவென்றால், மக்கள்தொகை கணக்கெடுப்பு, பின்னர் தொகுதி மறுவரையறை எல்லாம் முடியவேண்டுமானால் 2034 ஆகிவிடும். என்னே ஒரு ஏமாற்று!