states

img

சேலம் பட்டாசு குடோனில் தீ விபத்து

சேலம், ஜூன் 1- சேலம் அருகே பட்டாசு குடோனில் நடந்த தீ விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சேலம் இரும்பாலை அருகே எஸ்.கொல்லப்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் செயல்பட்டு வந்தது. இங்கு வழக்கம் போல வியாழனன்று ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது திடீரென பட்டாசு குடோனில் இருந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது பட்டாசு குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து இரும்பாலை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில்  தீயில் சிக்கியவர்களை  தீயணைப்புத் துறையினர் போலீசாரின் உதவியுடன் மீட்டனர்.  இதில் பட்டாசு குடோன் உரிமையாளர் சதீஷ்குமார், நடேசன் மற்றும் மணிமேகலை ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி நேரில் பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.  சேலத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தும், பலர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;