நாமக்கல், மே 14- பரமத்திவேலூர் வட்டம் வடகரை யாத்தூர் ஊராட்சி கரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண் கடந்த 11.3. 2023 அன்று பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 17 வயது சிறுவன் குற்றவாளி என காவல்துறை கைது செய்துள்ளது. ஒரு சிறுவனால் மட்டுமே பாலியல் வன்புணர்வு படுகொலையை செய்திருக்க முடியாது என அப்பகுதி மக்களுக்கு பெரும் சந்தேகம் இருந்து வருகிறது. எனவே உண்மை குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரும் அவர்களது உறவினர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து போராடி வந்தது. 2023 மே 9, 10 தேதிகளில் சென்னை யில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டத்தில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது. அதனைத் தொடர்ந்து 14/5/2023 தமிழக அரசு மேற்கண்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாமக்கல் மாவட்ட குழு வரவேற்கிறது. அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைத்திடவும் அப்பகுதி யில் தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டுவீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடைபெறுவதை கட்டுக்குள் கொண்டு வந்து அப்பகுதியில் அமைதி திரும்ப உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.