தஞ்சாவூர், ஜூலை 21 - திருவையாறு புறவழிச்சாலைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில், நிலத்திற்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை பணிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், 6.74 கி.மீ.க்கு 191.34 கோடி ரூபாயில் புறவழிச்சாலை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. அரசூர், கண்டியூர், நடுப்படுகை, தில்லைஸ்தானம், அந்தணர் குறிச்சி, விளாங்குடி என ஏழு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வழியாக இச்சாலை அமைக்கப்படுகிறது. இந்நிலையில், கண்டியூர் அருகே நெற்பயிர் மீது மண்ணை கொட்டி சாலை அமைக்கும் போது, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 150 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடந்தது. அப்போது, பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கும், பயிர்களுக்கும் ஏற்ப இழப்பீடு தொகை ஒரு வாரத்திற்குள்ளாக வழங்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால், தற்போது இழப்பீடு தொகை வழங்குவதாக கூறி, சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாகி யும், விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து வியாழக்கிழமை இழப்பீடு தொகை கேட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகள், கண்டியூர் அருகே காட்டுக்கோட்டை பாதையில், பணிகளை தடுத்து கறுப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.