திண்டுக்கல். மார்ச் 17- பழனி பகுதியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் நெல், வாழை, கரும்பு, காலிபிளவர், மக்காச்சோளம் கடுமையாக சேதமடைந்தன. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாவட்டச்செயலாளர் எம்.இராமசாமி திண்டுக்கல் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பழனி அருகே ஆண்டிபட்டி, குதிரையாறு அணை, பாப்பம்பட்டி, காவலப்பட்டி, வி.பி.புதூர் ஆகிய கிராமங்களில் வியாழனன்று மாலை 5 மணிக்கு சூறாவளிக்காற்றுடன் கூடிய கடுமையான ஆலங்கட்டி மழை பெய்தது.இதனால் நெல், வாழை, தென்னை, பயிர்கள் மற்றும் மரங்கள் கடும் சேதமடைந்துள்ளன. ஆண்டிப்பட்டி, பாப்பம்பட்டி பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆலங்கட்டி மழை காரணமாக நெல் மணிகள் உதிர்ந்துள்ளன. மழை வெள்ளத்தால் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. காவலப்பட்டி பகுதியில் பலன் தரும் வாழை, தென்னை மரங்கள் சூறைக்காற்றால் முறிந்து சாய்ந்துள்ளன. இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் கந்து வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்துள்ளார்கள். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமுற்ற பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பழனி கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆண்டிபட்டி, தாதநாயக்கன்பட்டி, காவலப்பட்டி, பாப்பம்பட்டி, ஆகிய பகுதிகளிலும் பழனி வட்டாட்சியர் பாதிக்கப்பட்ட நிலபுலங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்களுடன் சேதம் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.