states

வெளிமுகமை மூலம் அரசுப்பணிக்கு ஆட்களை நியமிக்கும் அரசாணையை ரத்து செய்திடுக!

முதல்வருக்கு அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள்

சென்னை,நவ.11- வெளிமுகமை மூலம் அரசுப்பணிக்கு ஆட்களை நியமிக்கும் அரசாணை நிலை எண்.115ஐ ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் அடிப்படை ஊழியர்களை அத்துக்கூலிகளாக மாற்றக்கூடிய அரசாணை எண்.152ஐ ரத்து செய்ய வேண்டும். வாழ்வாதார பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி, சரண்டர் வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை 18.10.2022ஆம் தேதி வெளியிட்ட வெளிமுகமை மூலம் அரசுப்பணிக்கு ஆட்களை நியமிக்கும் அரசாணை நிலை எண்.115ஐ உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட, பெரும்பாலான துறைவாரி சங்கங்களிடமிருந்தும் சில அரசியல் கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழக முதல்வர் உடனடியாக மேற்படி அரசாணை எண்.115ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வு வரம்புகளை ரத்து செய்வதாக கூறியுள்ளதை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வரவேற்கிறது. அரசாணையை அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பதற்கான நியாயங்களை முதல்வர் உடனடியாக உணர்ந்து கொண்டதற்கு நன்றி.

அதே சமயம் ஆய்வு வரம்புகளை மாற்றியமைப்பதும், சீரமைப்பதும் மட்டுமே இதற்கு தீர்வாகிவிடாது என்பதை முதல்வர் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.  மேலும் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த மாநகராட்சி, நகராட்சி ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த பணியிடங்கள் குறைக்கப்பட்டும் குறிப்பாக ‘டி’ கிரேடு அடிப்படை ஊழியர் பணியிடங்கள் அனைத்தும் தற்போது பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அப்பணியிடங்களை நிரப்பாமல் எதிர்வரும் காலங்களில் அப்பணிகளை வெளிமுகமை மூலம் நிரப்பிக் கொள்ளலாம் என அரசாணை எண்.152ஐ வெளியிட்டு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள நிரந்தர பணியிடங்களை ஒழித்துவிட்டு அத்துக்கூலிகளை உருவாக்க வழிசெய்துள்ள சமூக அநீதி அரசாணை எண்.152ஐயும் ரத்து செய்திட வேண்டியதும் அவசியமானதாகும்.  ஒரு அரசாங்கம் தன்னுடைய ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவினங்கள் அதிகமாக இருப்பதால் அதை தனியார் வசம் ஒப்படைத்து விட முற்படுவது மிகவும் துரதிருஷ்டமானதாகும். அரசாங்கம். அதுவும் ஒரு மக்கள் நல அரசாங்கம் என்பது லாப நட்ட கணக்குகளை பார்க்கும் இடம் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் பணிபுரியும் இடங்கள் அல்ல. 

அரசாங்கத்தை கார்ப்பரேட் மயமாக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதற்கான கருவிகளாகவே அரசாணை எண்.115 மற்றும் அரசாணை எண்.152ஐ தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பார்க்கிறது. எனவே, தமிழக முதல்வர் இந்த ‘சீரமைப்பு’ ‘மனிதவளம்’ போன்ற வார்த்தைகளை தவிர்த்து அரசாணைகளின் சில பகுதிகளை மட்டுமல்ல அரசாணையையே ரத்து செய்து உத்தரவிடுவதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும். தமிழக முதல்வர்  காலை சிற்றுண்டியை பரீட்சார்த்த முறையில் குறிப்பிட்ட சில இடங்களில் அமல்படுத்தியுள்ளது பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவற்றை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் மேற்படி திட்டத்தை வெளிமுகமை மூலமாக செயல்படுத்துவதை தவிர்த்து அதை சத்துணவு ஊழியர்களைக் கொண்டே நடத்துவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும்.

நிதி செலவினம் இல்லாத சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரையறுத்தல் மற்றும் கருவூலம் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிடுதல், சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட பிரிவினருக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கிடுதல் போன்ற சில கோரிக்கைகளில் கூட முதல்வர் மனம் செலுத்தாமல் மௌனமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இதுபோன்ற அவுட்சோர்சிங் பணியிடங்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக உள்ளது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய மனக்குமுறல்களை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட வாழ்வாதார பழைய ஓய்வூதியம் போன்றவற்றை கொரோனா காலத்திற்குப் பிறகும் தொடர்ச்சியாக நிறுத்தி வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகள் சமூக நீதிக் கொள்கைகளுக்கு எந்தவிதத்திலும் ஏற்புடையதாக இருக்காது. எனவே முதல்வர் அவர்கள் அரசாணை எண்.115 மற்றும் 152 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்வதோடு, சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரையறுத்திடவும், சத்துணவு. அங்கன்வாடி உள்ளிட்ட பிரிவினருக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கிடவும், மற்றும் அகவிலைப்படி. சரண்டர் உள்ளிட்ட வாழ்வாதார பழைய ஓய்வூதியம் வழங்கிடவும் அரசாணைகள் வெளியிட்டுஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அகவிலைப்படி மற்றும் சரண்விடுப்புக்கான ஊதியத்தை பணமாக பெற்றுக்கொள்ளும் உரிமைக்கான அறிவிப்பினை இனியும் தாமதிக்காமல் உடனடியாக செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.