‘‘தனி உடைமை கொடுமைகள் தீர, தொண்டு செய்யடா நீ தொண்டு செய்யடா, தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா’’ என முழங்கியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். உள்ளூர் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஒரு வருடம் அரிச்சுவடி படிப்பு பெற்றதோடு அவரது படிப்பு முடிந்தது. தொடக்கத்தில் விவசாயியாக வாழ்க்கை யைத் தொடங்கிய அவர் பல்வேறு தொழில்களை செய்து வந்தார். நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சக்தி நாடக சபாவில் இணைந்து நடித்தார். பின் புதுச்சேரி சென்று பாவேந்தர் பாரதி தாசனிடம் கவிதை எழுத கற்றுக் கொண்டார். பின்னர் சென்னை ராயப் பேட்டையில் தங்கி சினிமா பட வாய்ப்புகளை தேடினார். 1954-ல் ‘படித்த பெண்’ படத்திற்கு இரண்டு பாடல்களை எழுதினார். அப்படம் வெளிவர தாமதமாகியது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த மகேஸ்வரி இவரது பாடலுடன் வெளிவந்த முதல் திரைப்படமாகும். பாசவலை என்ற திரைப் படத்திற்கு எழுதிய இவரது பாடலை படித்த எம்.எஸ்.விஸ்வநாதன் இவரை கட்டிப்பிடித்து அவர் கையில் முத்த மிட்டார். அந்த பாடல் ‘‘குட்டிஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்’’
தொடர்ந்து கிராமிய மணம் கொண்ட பாடல்களை எழுதி பாட்டாளி மக்களின் பாட்டு வாத்தியாரானார். எம்.ஜி.ஆரின் கனவுப் படமான நாடோடி மன்னனில் ‘‘சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி சோம்பலில்லாம ஏர் நடத்தி’’ என தொடங்கும் அந்த பாடலில் ‘‘காடு விளைஞ்சென்ன மச்சான் கையும் காலும் தானே மிச்சம். இப்போ காடு வெளை யட்டும் பொண்ணே நமக்கு காலம் இருக்குது பின்னே’’ எனும் வரிகள் விவ சாயிகளின் உழைப்பு சுரண்டப்படு வதையும், அவர்களின் கவலையை வெளிப்படுத்தும் விதத்திலும் அமைந்தது. ‘‘தூங்காதே தம்பி தூங்காதே, நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே’’ என்ற பாடல் மற்றொரு பிரபலமான பாட லாகும். இந்தப்பாடல் பட்டி தொட்டி எல்லாம் வலம் வந்து மக்களை முணு முணுக்க வைத்தது. ‘‘திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே’’ என்று குழந்தை க்கு போதித்து அவர்களுக்கு தைரியத்தை வழங்கியதோடு ‘‘வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்று ஆடுதுன்னு விளை யாடபோகும் போது சொல்லி வைப்பாங்க! உன்வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க! வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கை யாக கூட நம்பி விடாதே! நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே’’ என்று அவர்கள் மனதில் பகுத்தறிவு விதையையும் ஊன்றினார். முதல மைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஒரு முறை வானொலி நேர் காணலின் போது ‘‘என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை எனக்கு தெரியாது. நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று மனம் திறந்து பாராட்டினார்.
கவிஞர் மொத்தம் எழுதிய பாடல்க ளின் எண்ணிக்கை 187. ஒவ்வொரு பாடல்களும் சாகா வரம் பெற்றவை. பட்டு கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற சில பாடல்கள் ‘‘கொக்கர கொக்கரக்கோ சேவலே (பதிபக்தி), என் அருமை காத லிக்கு வெண்ணிலாவே (எல்லோரும் இந்நாட்டு மன்னர்), சின்னப்பயலே சின்னப்பயலே (அரசிளங்குமரி), உன்னை கண்டு நானாட (கல்யாணப்பரிசு), ஆடை கட்டி வந்த நிலவோ (அமுதவல்லி), உனக்காக எல்லாம் உனக்காக (புதையல்), இரை தேடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே (பதிபக்தி), முகத்தில் முகம் பார்க்கலாம் (தங்கப் பதுமை) போன்றவை. கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் புகழின் உச்சியில் இருந்த போது எதிர்பாராத வகையில் தமது இருபத்தி ஒன்பதாவது வயதில் இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்கை எம்.ஜி.ஆர் ஏற்று நடத்தினார். கல்யாண சுந்தரத்தின் மனைவின் பெயர் கௌர வாம்பாள். ஒரே மகன் குமாரவேலு. 1959-ஆம் ஆண்டு கோவை மில் தொழிலாளர் சங்கம் பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்திற்கு ‘மக்கள் கவிஞர்’ என்ற பட்டத்தை வழங்கியது. 1981-ஆம் ஆண்டு தமிழக அரசு கவிஞ ருக்கு ‘பாவேந்தர்’ விருதை வழங்கி யது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்த ரத்தின் அனைத்துப் பாடல்களும் அரசுட மையாக்கப்பட்டன. இரண்டாயிரமாவது ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பட்டுக்கோட்டை யில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்த ரத்தின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். அங்கு அவரது மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
யூகே.சிவஞானம்
சிபிஐ(எம்) கோவை மாவட்டச்
செயற்குழு உறுப்பினர்