விருதுநகர், மே 15- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் யானை தந்தத்தால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அணிகலன் மற்றும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் கண்டறியப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, அகழாய்வில் சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண் அகல்விளக்கு கண்டறியப்பட்டன. இந்நிலையில், ஞாயிறன்று அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் ஆகிய அணிகலன்கள் கண்டறியப்பட்டுள்ளன. யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன் 5 சென்டிமீட்டர் நீளமும், 0.8 சென்டிமீட்டர் விட்டமும், 61 கிராம் எடையும் சுடுமண் தொங்கட்டான் 2.2 சென்டிமீட்டர் நீளமும், 1.01 சுற்றளவும் 65 கிராம் எடையும் கொண்டதாக உள்ளன.