தேசிய புலனாய்வு முகமையைக் கலைத்திடுங்கள்!
ஆள் தூக்கி உபா சட்டத்தை ரத்து செய்யுங்கள்!
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உடையவர் என முத்திரை குத்தப்பட்டு, ‘உபா’ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, ஜாமீன் இன்றி சிறையில் 8 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த பேராசிரியர் டாக்டர்.ஜி.என்.சாய்பாபா, குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாமல், நாக்பூர் நீதிமன்றம் அக்டோபர் 13 வெள்ளியன்று விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் சனியன்று உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இது, ‘உபா’ சட்டத்தின் கொடுங்கோன்மையை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது. இந்த நிலையில், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ( உபா ) ஆளும் ஒன்றிய அரசின் மீது மாற்றுக் கருத்து கொண்ட செயல்பாட்டாளர்கள் மீது எந்த அளவுக்கு கொடிய அத்துமீறல்களை ஏவியிருக்கிறது என்பதை, கள ஆய்வின் அடிப்படையில், மக்கள் உரிமைக் கழகம் (பியுசிஎல்) அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு இங்கே தரப்படுகிறது:
ஆட்சியாளர்களுக்கு எதிராக மாற்றுக் கருத்து கொண்ட செயல்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயகம் ஆகிய வற்றுக்கான அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் அனைவருக்கும் எதிராக இந்திய அரசு அடக்குமுறைச் சட்டமான “சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA)” சட்டத்தை எவ்வாறு ஆயுதமாக்கியுள்ளது என்ற ஆய்வின் முதல் பகுதியில், இந்தியாவில் உபா (UAPA) சட்டத்தின் படி தேசிய புலனாய்வு முகமை (NIA) இச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி உள்ளதை உறுதி செய்ய முடிந்தது. குறிப்பாக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014 மே மாதம் பொறுப் பேற்ற பின் இருக்கும் நிலையை கணக்கில் கொண்டோம்.
80 சதவீத வழக்குகள்
தேசிய புலனாய்வு முகமை அதன் இணையதளத்தில் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் 2009 முதல் ஆகஸ்ட் 2022 வரைஇந்த ஆய்வுக்கான காலமாக எடுத்து கொள்ளப்பட்டது. அதன்படி, தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்த சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா) வழக்குகள் மொத்தம் 357. இவற்றில் சுமார் 20% வழக்குகள் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின் போது பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவை. 80% உபா வழக்குகள் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவை.
என்ஐஏவின் அத்துமீறல்கள்
மாநில காவல்துறையிடம் இருந்து விசாரணைகளை தானாக தன் வசம் ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ள உள்ள அதிகாரம், கூட்டாட்சி தத்துவத்திற்கு அச்சுறுத்தல், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) என்ற புலனாய்வு அமைப்பு ஒன்றிய அரசால் எப்படி ஒடுக்குமுறை கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தேசிய புல னாய்வு முகமை இணையதளத் தரவுகளின் அடிப்படையில் செய்த ஆய்வில், தேசிய புலனாய்வு முகமையினால் விசாரிக்கப்பட்ட 357 உபா வழக்குகளில் பின்வருமாறு விடைகள் கிடைத்தன :
(i) தானாக பதிவுசெய்யப்பட்டவை: 41 வழக்குகள், அதாவது 12% வழக்குகள்;
(ii) மாநில காவல்துறையிலிருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) க்கு மாற்றப்பட்டது: 316 வழக்குகள், அதாவது 88% வழக்குகள்.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பீமா கோரேகான் வழக்கை மகாராஷ்டிர மாநில காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற உள்துறை அமைச்சகம் ஒரே இரவில் முடிவு செய்தது. அதற்கு காரணம் பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் தேர்தலில் தோல்வி அடைந்து, சிவசேனா தலைமையில் உத்தவ் தாக்கரேயின் அரசாங்கம் பதவிக்கு வந்தது தான். இது போல் பரந்த அளவில் அதிகாரங்களை மிகவும் தவறான வகையில் தேசிய புலனாய்வு முகமை பயன்படுத்தியது. “இவ்வாறு மாற்றப்பட்ட வழக்குகளில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நாட்டின் பாதுகாப்புக்கோ அல்லது இறையாண்மைக்கோ எவ்வகையிலும் அச்சுறுத்தல் அல்லது வன்முறையில் ஈடுபடும் வகையில் இல்லை. எனவே மாநில காவல்துறையில் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்குகள் மாற்றப்பட்டது ஏற்புடைய தல்ல. இது உள் நோக்கம் கொண்டது என்பது தெளிவாக இந்த ஆய்வில் தெரியவந்தது.
15.08.2019 அன்று மதுரையில் ஒருவர் முகநூல் பதிவை பதிவிட்ட ஒரு வழக்கு, அதில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது முகநூலில் “ இந்தியாவில் உண்மையிலேயே சுதந்திரம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்காக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கு 2021 ஆம் ஆண்டு திடீரென்று தமிழக காவல்துறை யிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இது போன்று ஒன்றிய அரசு தன்னிச்சையாக மாநில வழக்குகளை தேசிய புலனாய்வு முகமைச் சட்டம் மூலமாக தனது வசம் எடுத்துக் கொள்வது மாநிலங்களின் உரிமை, கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தலாகும்.
சதி ஆலோசனை என்ற சட்டப் பிரிவை தவறாகப் பயன்படுத்துதல்
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) பிரிவு 18, `சதிக்கான ஆலோசனை’ என்பது தவறாக பயன்படுத்தப் பட்டதையும் இந்த ஆய்வில் அறிய முடிந்தது. உண்மையில் ஒரு சதி நடந்திருக்க வேண்டியதில்லை. ஆனால் அது போல ஒரு ஒப்பந்தம் இருப்பதாக குறிப்பிடுவதே பயங்கரவாத குற்றமாக கருதப்படுகிறது. இப்பிரிவில் வழக்குத் தொடர, ‘சதி’ என்பதன் பொருள் குற்றம் நிகழ்ந்திருக்க வேண்டியதில்லை; சதி என்று கருதினாலே போதும்; எவர் ஒருவரையும் இப் பிரிவில் குற்றவாளியாக சேர்க்க முடியும். இவ்வாறாக, பிரிவு 18 “சதி ஆலோசனை” பிரிவின் கீழ் தாக்கல் செய்த வழக்குகளை ஆய்வு செய்த போது கீழ் கண்ட முடிவுகள் வெளிப் பட்டன. தேசிய புலனாய்வு முகமையினால் விசாரிக்கப்பட்ட உபா சட்டத்தின் கீழ் இருந்த வழக்குகளின் மொத்த எண்ணிக்கை: 357. அதில் “சதி ஆலோசனை” என்ற பிரிவு 18 ன் கீழ் சேர்க்கப்பட்ட வழக்கின் எண்ணிக்கை 238. இந்த 238 வழக்குகளில்; - சில பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்த வழக்குகள்: 86 வழக்குகள் (36%)
- ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட சம்பவம் இல்லாத வழக்குகள் அல்லது வன்முறை எதுவும் இல்லாத : 152 வழக்குகள் (64%). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “சதி ஆலோசனை” என்ற பிரிவின் கீழ் பதியப்பட்ட மேற்கண்ட 64% வழக்குகளில், தடைசெய்யப் பட்ட பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக உள்ளார் அல்லது அவரி டமிருந்து ஆயுதம் அல்லது வெடிமருந்துகள் அல்லது போதைப்பொருள் அல்லது பணம் மீட்கப்பட்டதாக காவல்துறை குற்றம் சாட்டினாலே, அந்த நபரை கைது செய்து பல ஆண்டுகள் சிறையில் அடைக்க அதுவே போதுமானது. உபா வழக்குகளில் தண்டனை விகிதம் குறைவு; ஆனால் ஜாமீனில் வருவது அரிது, குற்றம் உறுதி செய்யப்படாமலே பல்லாண்டு காலம் சிறையில் அடைபட்டு இருக்க வேண்டியது கட்டாயம்.
கைது செய்யப்பட்டவர்கள்
உபாவின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களின் உண்மையான எண்ணிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்கள் மட்டுமே ஆதாரம்; 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் தரவுகள் துல்லியமாக இருந்தா லும், ஆய்வில் இருந்து வெளிவரும் உண்மை வேதனையானது.
மொத்த கைது:
இந்தியா முழுவதும் 5924 உபா வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன, அதில் 8371 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், ஜாமீனில் விடுதலை ஆனவர்கள் எண்ணிக்கை சதவீதம் 16.88% இருந்து 16.32% ஆகக் குறைந்தது. 2019 இல் ஜாமீனில் வந்தவர்களின் எண்ணிக்கை 32.08% என அதிக ரித்தது போல் தெரிந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் உபாவின் கீழ் கைது செய்யப்பட்டதாகக் காட்டப்பட்ட 308 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தமிழக நீதிமன்றம் வழங்கிய பிணை வழக்குகளை ஒதுக்கி வைத்தால், பிணையில் விடுதலை ஆனவர்கள் சதவீதம் 16.27% ஆகவே இருக்கும்.
தண்டனை விகிதங்கள்:
வழக்கு எண்ணிக்கை அடிப்படையில் தண்டனை பெற்றவர்கள் விகிதம்: 27.57% உபா வழக்குகளில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை யின் அடிப்படையில் விசாரணைக்கு பின்னர் 2.8% என்ற குறைவான அளவிலேயே தண்டனை விகிதம் உள்ளது. முந்தைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களான தடா (TADA) சட்டம் மற்றும் பொடா (POTA) சட்டங்கள் நடைமுறையில் இருந்தபோது இதேபோல் குறைந்த தண்டனை விகிதமே இருந்தது. வேறு விதமாகப் பார்த்தால், 2015 - 2020 காலகட்டத்தில் உபாவின் கீழ் கைது செய்யப்பட்ட 8,371 பேரில், கிட்டத்தட்ட 8,136 பேர் சிறையில் அடைப்பட்டனர். இந்த எண்ணிக்கை 97.2% ஆகும். ஆனால் கைதுக்கு பின்னர் பிணை இல்லாமல் பல ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு விடு விக்கப்பட்டுள்ளனர். “இத்தகையோர் கூடுதலாக விடுவிக்கப்பட்டதற்கு காரணம் பெரும்பாலான வழக்குகள் அடிப்படையில் தகுதியற்றவை மற்றும் உபாவின் கீழ் முதலில் வழக்குத் தொடர முகாந்திரம் இல்லா தவை என்பதுதான்.
எனவே
1. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) ரத்து செய்ய வேண்டும்; அது போன்ற மற்ற அனைத்து மக்கள் விரோதச் சட்டங்க ளையும் ரத்து செய்ய வேண்டும்.
2. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் தேசிய புலனாய்வு முகமை கலைக்கப் பட வேண்டும்.
3. சிறையில் வாடும் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடி யாக பிணையில் விடுவிக்க வேண்டும்.
4. ஒடுக்கப்பட்ட சமூகங்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்களுக்கு எதிராக வேண்டுமென்றே பொய்யாக புனையப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். அந்த வழக்குகளை தொடுத்த அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. நீதிமன்றத்தால் தவறாக குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவர்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுரையாளர் : தேசிய பொதுச் செயலாளர், பியுசிஎல்