states

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை,ஜூலை 19- சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள்  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனி சாமி அதிமுக இடைக்காலப் பொதுச்  செயலாளராக தேர்வானார். அதனைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரை  கட்சியை விட்டு நீக்குவதாக எடப்பாடி பழனி சாமி அறிவித்தார். உடனடியாக எடப்பாடி பழனி சாமி உட்பட பலரை கட்சியிலிருந்து நீக்குவதாக  ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்திற்கு அதிமுக கட்சியின் கொறடா எஸ்.பி.வேலுமணி, எதிர்கட்சித் துணைத் தலைவர் தொடர்பாக கடிதத்தை பேரவைத் தலைவர் அப்பாவிடம் வழங்கினார்.ஓ. பன்னீர்செல்வம் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் 3 பேரும் அதிமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில் பேரவைத் தலைவரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் துணைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.