states

மகளிர் உரிமைத் தொகையை மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கும் வழங்கிடுக!

சென்னை, ஆக.4- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) மாநிலக்குழுக் கூட்டம் ஜூலை-30 ஞாயிறன்று தென்காசி மாவட்டம்  குற்றாலத்தில் நடைபெற்றது.  கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அனைத்து மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கும் வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச்செயலாளர் பா.ஜான்ஸிராணி ஆகியோர் கூறியிருப்பதாவது:  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செப்டம்பர் 15 முதல் செயல்படுத்த தமிழக அரசு எடுத்து வருகிற நடவடிக்கைகளை மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்கிறது.  சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை  பெற்று வருகிற மாற்றுத்திறனாளி யாரேனும் ஒருவர் குடும்பத்தில் இருந்தால், அந்த குடும்பத்தின் தலைவி மகளிர் உரிமை தொகை பெற முடியாது என நிபந்தனை வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையால் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்கள் பாதிக்கப்படுவர்.

இந்த குடும்பங்கள் பெருத்த ஏமாற்றத்திலும், வருத்தத்திலும் உள்ளன. ‘‘மாற்றுத்திறனாளிகளை குடும்பமும் , சமூகமும் பொதுவாக புறக்கணிக்கின்ற சூழ்நிலையில், குடும்பத் தலைவிக்கான மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்கு மாற்றுத்திறனாளி தடையாக இருக்கிறார் என்ற காரணத்தினால், குடும் பங்களில் மாற்றுத்திறனாளிகள் மீது  கோபமும், வெறுப்பும், புறக்கணிப்பும் இன்னும் கூடுதலான பிரச்சனையாக  வந்து சேரும்’’ நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் மருமகள் மாற்றுத் திறனாளியாக இருந்தால் அவரின் நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும். வறுமையில் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களை விட வாழ் நாள் முழுவதும் கூடுதல் செலவு செய்வதால், அத்தகைய குடும்பங்கள் வாழ்நாள் சுமையை சந்திக்கிறது என இந்திய அரசு கையெழுத்திட்டு ஏற்றுள்ள 2007ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான ஐ.நா. சிறப்பு மாநாட்டு சாசனம் உறுதிப்படுத்தியுள்ளது. மாற்றுத் திறனாளிகளுடைய கூடுதல் செலவுகளை - சுமைகளை ஈடுசெய்ய வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை, மற்ற திட்டங்களுக்கு வழங்கப்படும் தொகைகளுடன் எந்த வகையிலும் காரணம் காட்டக்கூடாது . எனவே மாற்றுத் திறனாளிகளின் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகையை மறுக்கக் கூடாது.    விதியை தளர்த்தி, மாற்றுத்திறனாளிகள் இடம் பெற்றுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கிட  உரிய உத்தரவை   முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும். 

ஆக.7 ஆர்ப்பாட்டங்கள்

இந்தக் கோரிக்கையின் மீது தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் ஆகஸ்ட் 7 திங்கள்கிழமையன்று தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்ட, ஒன்றிய தலைநகரங்களில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டங்கள் நடத்திட மாற்றுத்திறனாளிகள்  சங்க மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.