2024 தேர்தலுக்காக 3 குழுக்களை அமைத்தது காங்கிரஸ்!
2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரசியல் விவகாரங்கள் குழு, தேர்தல் செயற் பாட்டுக் குழு, யாத்திரைக் குழு என்ற 3 குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான குழுவில் ராகுல் காந்தி, மல்லி கார்ஜூனா கார்கே, கே.சி. வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் செயற்பாட்டுக்கான குழுவில் ப. சிதம்பரம், கே.சி. வேணுகோபால், அஜய் மக்கான், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் “பாரத் ஜோடா யாத்திரையின்” திட்டமிடலுக்கான குழுவில் ஜோதிமணி, சசி தரூர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ஜப்பான் நாளிதழில் கட்டுரை எழுதிய பிரதமர் மோடி!
‘குவாட்’ மாநாட்டிற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் ‘யோமியுரி ஷிம்பன்’ (Yomiuri Shimbun) என்ற உள்ளூர் நாளிதழில், ‘பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும் குவாட் மாநாடு’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “குஜராத் முதல்வராக நான் இருந்த நாட்களிலிருந்தே ஜப்பானிய மக்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு தொடர்ச்சியாக கிடைத்துள்ளது. ஜப்பானின் முன்னேற்றங்களும், வளர்ச்சியும் எப்போதும் போற்றத்தக்கவை. தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, புதுமை, புதிய தொழில்கள் தொடங்குவது உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஜப்பான், இந்தியா வுடன் கூட்டு சேர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சார்தாம் யாத்திரை: இதுவரை 62 பக்தர்கள் பலி!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நான்கு புனிதத் தலங்களுக்கு செல்லும் ‘சார்தாம் யாத்திரை’ கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை, 8 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், யாத்திரையின்போது உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை வரை 62 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேதார்நாத்தில் 30 பேரும், யமுனோத்திரியில் 17 பேரும், பத்ரிநாத்தில் 11 பேரும், கங்கோத்திரியில் 4 பேரும் பலியாகியுள்ளனர். இதில், “66 சதவிகித இறப்புகள் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக நிகழ்ந்துள்ளது” என்று சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் ஷைலஜா பட் தெரிவித்துள்ளார்.
‘மாட்டிறைச்சி உண்பதை யாரும் கேள்விகேட்க முடியாது!
“நான் ஒரு இந்து. இதுவரை நான் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. ஆனால், நான் விரும்பினால் நிச்சயம் அதைச் சாப்பிடுவேன். என்னைக் கேள்வி கேட்க நீங்கள் (பாஜக) யார்? மாட்டிறைச்சி உண்பவர்கள் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல. பட்டியல் வகுப்பினர், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் மாட்டு இறைச்சியை சாப்பிடுகிறார்கள். அதனால், கர்நாடகத்தில் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்தி இருப்பது சரியல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சக மனிதர்களிடையே வேறுபாடுகளை உருவாக்குகிறார்கள்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சாடியுள்ளார்.
குதூப்மினார் நினைவுச் சின்னம்தான், வழிபாட்டு தலமல்ல!
குதூப்மினார், முன்பு விஷ்ணு ஸ்தம்பமாக இருந்தது என்றும், அந்த வளாகத்தில் உள்ள மசூதிக்குள் இந்து, ஜைன மத கடவுள் சிலைகள் இருப்பதாகவும் சர்ச்சை கிளப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இந்துத்துவா அமைப்புகள் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன. இந்நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை செவ்வாயன்று தில்லி நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், “குதூப்மினார் ஒரு நினைவுச் சின்னம் ஆகும். அத்தகைய கட்டமைப்பின் மீது யாரும் அடிப்படை உரிமைகளை கோர முடியாது. இந்த இடத்தில் வழிபாடு நடத்த எந்த உரிமையும் வழங்க முடியாது” என்று தெரிவித்துள்ளது.
ஏடிஎம் மூலம் மட்டுமே பின்என்பி-க்கு ரூ.645 கோடி லாபம்!
பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேசனல் வங்கி, ஏடிஎம் பரிவர்த்தனைகள் கட்டணங்கள் விதிப்பு மூலம் திரட்டிய வருவாய் விவரங்களை, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டு இருந்தார். அதற்கு, கடந்த 2021-22 நிதியாண்டில், வாடிக்கை யாளர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்களை விதித்தன் மூலம் ரூ. 645 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக வும், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க தவறிய வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்த வகையில் ரூ.239.09 கோடி வசூலித்துள்ளதாகவும் பிஎன்பி வங்கி பதிலளித்துள்ளது.
தரக்குறைவாக பேச ஆட்களை நியமித்துள்ளார் மோடி!
“எனக்கும் மோடிக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. கொள்கை முரண்பாடு மட்டுமே. ஆனால், என்னை பற்றி தரக்குறைவாகப் பேச அவர் டுவிட்டரில் ஆட்களை நியமித்து இருக்கிறார். அவர்கள் என்னுடைய குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக பேசுகின்றனர். நான் கொள்கை முரண்பாடுகள் பற்றி மட்டுமே டுவீட் செய்வேன். என் மீதான விமர்சனங்கள் நிற்கவில்லை என்றால் நானும் விமர்சனங்களை நிறுத்த மாட்டேன்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி ஆவேசப்பட்டுள்ளார்.
பெரியார் பற்றிய முழுப் பாடத்தையும் நீக்கவில்லை!
“சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், சமூக சீர்திருத்தவாதிகள் நாராயண குரு, ஈவெரா பெரியார், 18ஆம் நூற்றாண்டில் மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பற்றிய எந்த ஒரு பாடமும் நீக்கப்படவில்லை. பாடப்புத்தகத்தில் சில திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. பெரியார் பற்றிய பாடம் நீக்கப்படவில்லை. மாறாக அதில் இடம் பெற்றிருந்த இந்து மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் திப்பு சில்தானுக்கு துதிபாடிய வாக்கியங்களை நீக்கியுள்ளோம். கூடுதலாக அந்த வரலாற்றின் மறு பக்கம் பற்றிய தகவல்களையும் சேர்த்துள்ளோம்” என்று கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் கூறி யுள்ளார்.
2 ஆண்டுக்குப் பின் மீண்டும் மோடி தலைமையில் யோகா!
“சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதி மைசூரில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடை பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 70 நாடுகள் பங்கேற்கவுள்ளன. இதில் ஒன்றிய அமைச்சர்கள், சினிமா, விளையாட்டுத்துறை பிரபலங்கள், யோகா வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி காலை 6 மணி முதல் தொடர்ச்சியாக நேரலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று ஒன்றிய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.
இந்தோ-பசிபிக் வளர்ச்சிக்கு 50 பில்லியன் டாலர்
குவாட் மாநாடு செவ்வாயன்று நிறைவு பெற்றது. இதன் நிறைவில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணங்களுக்கு உதவுவதற்கும் சட்டவிரோத மீன்பிடித்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் குவாட் நாடுகள் தங்கள் வலிமையை அதிகரிக்க உதவும் வகையில் இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்குவதற்கு குவாட் உச்சி மாநாடு ஒப்புதல் அறித்துள்ளது. இது அடுத்த ஐந்தாண்டுகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்கு உதவும் என தலை வர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த குவாட் மாநாடு 2023-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.