states

காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடாததற்கு கண்டனம்

சென்னை, ஆக.11- காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க உத்தரவிடாததற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வன்மையாகக் கண்டித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் போதிய தண்ணீர் கிடைக்காததால் காய்ந்து கருகி வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடிக்கு கீழ் குறைந்து வரும் நிலையில் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து இன்னும் ஒரு வாரத்திற்கு தான் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியும் என்ற சூழலில் தில்லியில் வெள்ளியன்று நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை உடன் திறப்பதற்கு முடிவெடுப்பார்கள் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் ஆணையக் கூட்டத்தில் கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறப்பதற்கான எந்த முடிவும் எடுக்காததால் தமிழ்நாட்டிலிருந்து கூட்டத்தில் பங்கேற்ற நீர்வளத்துறை உயரதிகாரிகள் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளனர்.  கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் வெள்ளியன்று நடைபெற்ற ஆணையக் கூட்டத்தில் கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் என உத்தரவிடாதது கடும் கண்டனத்திற்குரியது. கருகும் குறுவை பயிரை பாதுகாத்திட தமிழ்நாடு அரச உடன் சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.