states

தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை தேவை

சென்னை,நவ.19- தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க உறுதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சேர்ந்த இரண்டு மீன் பிடி படகுகளில் நாகபட்டினம் கோடியக்கரை பகுதியில் இருந்து தங்கு கடல் மீன் பிடிப்புக்காக கடந்த 15.11.2023 ஆம் தேதி  மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். இதில் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 22 மீனவர்கள் கோடியக் கரைக்கும் - பருத்தித் துறைக்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் அவர்கள் 22 பேர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.  கடலில் மீன் பிடிப்பது மட்டுமே வாழ்வாதாரம் என்ற வாழ்க்கை நிலையில் உள்ள கடலோர மீனவக் கிராமங்கள் அனைத்தும் கடுமையான வேதனையிலும், பாதுகாப்பற்ற பரிதவிப்பிலும் வாழ்ந்து வரு கின்றன. தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையில் இலங்கை கடற்படையின் அத்துமீறி மறுப்பதை இந்திய ஒன்றிய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும், மீன்பிடி தொழில் முழுமையாக பாதுகாப்புடன் நடைபெறும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என மீனவர்களும், அமைப்புகளும், அரசியல் கட்சி களும்  தொடர்ந்து பாஜக ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசும், முத லமைச்சரும், நாட்டின் பிரதமர், ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் மீனவர் பாது காப்புக்கு உரிய ஏற்பாடு செய்ய  தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனாலும் இலங்கை அரசுடன் - இந்திய ஒன்றிய அரசு  மீனவர்களின்  வாழ்வாதாரம்  குறித்து திட்ட வட்டமான பேச்சு வார்த்தை தொடங்கியதாக தெரியவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களும் இந்திய நாட்டின் குடிமக்கள் தான் என்பதை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுவித்து, அவர்களது உடமைகளுடன் நாடு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும். நீண்ட கடற்கரையை  பெற்றுள்ள தமிழ்நாட்டின்  ஆயிரக்கணக்கான மீனவக் கிராமங்களில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க ஒன்றிய அரசு உறுதியான நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நாட்டின் பிரதமர் மோடியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.