விழுப்புரம், மே 20 - விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சிமன்றத்தில் 100 நாள் வேலைத் திட்டப்பணிகள் நடைபெற்றது வருகிறது. இதற்காக 42 மாற்றுத்திறனாளிகள் வேலை அட்டை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அட்டை வழங்காமல் ஊராட்சி மன்றத்தலைவர் கமலக்கண்ணன் அலைக்கழித்து வந்தார். இதனால் பாதித்த மாற்றுத்திறனாளிகளை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மே 19 அன்று ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை முற்றுகையிடுவதற்கு ஒன்று கூடியது. இதனை அறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டி.மோகன், காலை 9 மணிக்கே காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத் திற்கு மாவட்ட வருவாய் அலுவலகர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட இயக்குநர் வருகை தந்தார். இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக 5 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டைகளில் கையெழுத்திட்டார். மேலும், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகளை கடுமையாக எச்சரித்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை அட்டையில் ஊராட்சி மன்றத் தலைவர் கமலக்கண்ணன் கையெழுத்திட்டு வழங்கினார். மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.