போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்ககோரி, சிஐடியு வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி போக்குவரத்து கழகங்களில் வேலைநிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பை செவ்வாயன்று (ஜூலை 19) மேலாண் இயக்குநர்களிடம் சிஐடியு வழங்கியது.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். 6 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்த வேலைநிறுத்த அறிவிப்பை சிஐடியு வழங்கியுள்ளது.
இதன் ஒருபகுதியாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாமிடம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன துணைத்தலைவர் எம்.சந்திரன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ஆர்.துரை, துணைப்பொதுச் செயலாளர் எம்.ரவிசங்கர் உள்ளிட்டோர் வேலைநிறுத்த அறிவிப்பை வழங்கினர். அதில், ஆகஸ்ட் 3 அன்று அல்லது அதற்கு பின்னர் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்படும் என தெரிந்தும் 10000க்கும் மேற்பட்ட கிராமப்புற, நகர்ப்புற வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் ஒன்றே முக்கால் கோடி மக்கள் பயணிக்கின்றனர்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் சுமார் 3000 வழித்தட பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பயணிகள் எண்ணிக்கையைக் குறைத்து போக்குவரத்து கழகங்களை அழிக்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டது. ஒன்றிய பிஜேபி அரசு மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்தி போக்குவரத்து கழகங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
மக்கள் சேவைக்காக கிராமப்புற வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளுக்கு அரசு எவ்வித உதவியும் செய்யாமல் தொழிலாளர்கள் பணத்தை வைத்து கழகங்களை இயக்கும் மோசமான நடவடிக்கையில் அதிமுக அரசு ஈடுபட்டது. மேலும் தொழிலாளர்கள் ஊதியத்தை குறைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்காமல் கொடுமைகள் செய்தது.
போக்குவரத்து கழகங்களைப் பாதுகாக்க வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். மற்ற துறை ஊழியர்களைப்போல் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் ஊதிய விகிதம் வழங்கி ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற உடன் ஓய்வுகால பலன்கள் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிமுக ஆட்சியில் தொடர் போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடைபெற்றது.
சட்டமன்றத்தேர்தல் அறிவிப்பு வெளியான 2021 பிப்ரவரி 26ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெற்று கொண்டிருந்தது. தேர்தல் அறிவிப்பையொட்டி. தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. திமுக அரசு வந்தவுடன் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என தொழிலாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகியும் பிரச்சனைகள் தீரவில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த தவறான நடவடிக்கைகள் இந்த ஆட்சியிலும் தொடர்ந்து நீடிக்கிறது.
போக்குவரத்து கழகங்களைப் பாதுகாக்க அரசு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என திராவிட முன்னேற்ற கழகமும், அதிமுக அரசிடம் கோரிக்கை வைத்தது. ஊதிய உயர்வு கேட்டு போக்குவரத்து ஊழியர்கள் போராடியபோது, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக 8 மாத காலம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஊதியத்தை வாங்க மறுத்தனர்.
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைக்காக ஆதரவு கரம் நீட்டிய திமுக ஆட்சியில, அதிமுக ஆட்சிகால அவலங்கள் நீடிப்பது சரியற்றது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. போக்குவரத்து கழகங்களை அழிக்கவும். தொழில் அமைதியை சீர்குலைத்து குழப்பத்தை ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசின் கேடுகெட்ட தனியார்மய கொள்கைகளை அமுல்படுத்த முயற்சிக்கின்றனர். தமிழக அரசையும் மீறி. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
எனவே தமிழக அரசு, போக்குவரத்து கழகங்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் பணத்தை வைத்து கழகங்களை நடத்த கூடாது. மற்ற துறை ஊழியர்களைப்போல் பே-மேட்ரிக்ஸ் அடிப்படையில் ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வுகால பலன்கள். மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 19 ஆம் தேதி அனைத்து கழகங்களிலும் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக காத்திருந்தும் நியாயங்கள் மறுக்கப்பட்டதாலேயே வேலைநிறுத்த அறிவிப்பை சிஐடியு வழங்கியுள்ளது. ஊழியர்களது கோரிக்கைகளில் தீர்வு கண்டு, வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.