வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் கார்த்தியாயினி. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்த கார்த்தியாயினி. தேசிய அளவில் அப்போது சர்ச்சையானவர் இவர். பொதுவாக நீதிபதிகளை விமர்சிக்கக் கூடாது என்பதை மறந்து மேயர் பொறுப்பில் இருந்தும் கார்த்தியாயினி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். அவரது உருவபொம்மையையும் எரித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேயரின் செயல் சட்டத்திற்குப் புறம்பான செயல். நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தன. சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும், அதை பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்டிய மேயர் கார்த்தியாயினி தீர்மானம் போட்டதற்காகவும், கொடும்பாவி கொளுத்தியதற்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பின் பாஜகவில் சேர்ந்தார் கார்த்தியாயினி. இப்பொது சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர். பாஜகவுக்கு உள்ளூரில் ஒரு பட்டியலின வேட்பாளர் கிடைக்கவில்லைபோலும். வேலூர் தொகுதியில் இருந்து கார்த்தியாயினி இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்.