சென்னை,செப்.13- காவிரி விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தது. ஆனால் கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இந்த விவகாரம் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் கர்நாடக அரசு, அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட வலியுறுத்தியது. இதுகுறித்த வழக்கு வருகிற 21 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதுவரை கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுகிறதா? என பார்க்க வேண்டும். இல்லையெனில் தற்போது நிலை குறித்து இணைத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். காவிரி விவகாரத்தில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவது மட்டும்தான். உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு தேவைப்பட்டால் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டலாம். காவிரி விவகாரத்தில் ஒவ்வொரு அங்குலத்திலும் கர்நாடக அரசு எதிர்ப்பை பதிவு செய்கிறது. கர்நாடக அரசின் எதிர்ப்பை சந்தித்து, மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத் தருகிறோம். தமிழ்நாட்டு அதிகாரிகள் நீர் அளவை ஆய்வு செய்ய கோரிக்கை வைப்போம். தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்காத வண்ணம் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம், நிவாரணம் வாங்கிக் கொடுப்போம் என்று தெரிவித்தார்.