states

சைபர் கிரைம் பிரிவுக்கு ரூ.9.28 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஜூலை 31- இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்தில் உள்ள 1930 அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறை ரூ.9.28 கோடி  மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்திட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- இணையதள குற்றங்கள் குறித்த அழைப்புகள் பெருகி வரும் நிலையில் ஏற்கெனவே உள்ள அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதன்படி இம்மையத்தில் புதிதாக கூடுதல் 15 பணியாளர்களை (மூன்றாண்டுகளுக்கு ரூ. 9.28 கோடி) ஒப்பளிப்பு செய்யவும். முதற்கட்டமாக இந்தாண்டுக்கு 3.10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வரால் 2023-24ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானியக் கோரிக்கையின் போது  தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்தில் உள்ள 1930 அழைப்பு மையம் / கட்டுப்பாட்டு அறையை 15 இருக்கைகள் கொண்ட மையமாக விரிவாக்கம் செய்ய ரூ.9.28  கோடி நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இதன் மூலம் இணையதள பொருளாதார குற்றங்கள், மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை விரைவாக வங்கி கண்டறிந்து, மோசடி நபர்களிடமிருந்து பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை மீட்டெடுக்க உதவிட வும், பிற இணையதள குற்றங்களில் இருந்து மக்களை காத்திடவும்  விரிவாக்கம் செய்யப்பட்ட 1930 அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறை பெரிதும் உதவும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.