லிமா, ஜூலை 20- வலதுசாரிகளின் சட்டவிரோத ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான தங்கள் போராட்டங்களின் ஒரு பகுதியாக தலைநகர் லிமாவை நோக்கி நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக வந்துள்ளனர். தென் அமெரிக்க நாடான பெருவில் இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்திய பெட்ரோ காஸ்டில்லோ ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். அவரது முற்போக்குக் கொள்கைகளுக்கு நாடாளுமன்றம் முட்டுக்கட்டை போட்டு வந்தது. நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் அறிவித்ததால், அவரைச் சட்டவிரோதமாகப் பதவியில் இருந்து வலதுசாரிகள் வெளியேற்றினார்கள். கடந்த எட்டு மாதங்களாக மக்கள் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். ஏற்கனவே இரண்டு முறை தலைநகரை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. தற்போது மூன்றாவது முறையாக “லிமாவைக் கைப்பற்றுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து பல்வேறு சமூக அமைப்புகள் போராடுகின்றன. போராட்டக்காரர்களுக்கு எதிராக 24 ஆயிரம் காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். நெருக்கடி நிலையைப் பிறப்பித்து மக்களைக் கூட விடாமல் தடுக்க முனைந்துள்ளனர். இருப்பினும் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்கிறார்கள். கிராமப்புறத்தில் இருந்துதான் பெரும்பாலான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.