புதுதில்லி, மே 8 - அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு, இனி மேற் கொண்டு பதவி நீட்டிப்பு வழங்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு தெரிவித்துள்ளது. அமலாக்கப்பிரிவு இயக்குநராக முதல் முறையாக 2018, நவம்பா் 19 அன்று இரண்டு ஆண்டுகளுக்கு சஞ்சய்குமார் மிஸ்ரா நியமிக்கப் பட்டார். 2020-இல் அவரது முந்தைய இரண்டு ஆண்டுகள் பணி நியமன உத்தரவு திடீரென மூன்று ஆண்டு களாக நீட்டிக்கப்பட்டது. இதனைக் கண்டித்த உச்சநீதிமன்றம், இதற்கு மேலும் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று கூறியிருந்தது. சஞ்சய் குமார் மிஸ்ரா வின் பதவிக்காலம் 2021 நவம்பர் 17 அன்றோடு முடிவடைவதால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படாது என்று கருதப்பட்டது. ஆனால், மிஸ்ரா பதவிக் காலம் முடிவதற்கு ஒரு வாரத்திற்கு முன்ன தாக திடீரென, 2 ஆண்டுகளாக உள்ள சிபிஐ, அமலாக்க பிரிவு இயக்குநர் களின் பதவிக்காலத்தை மோடி அரசு 5 ஆண்டுகளாக உயர்த்தியது. அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. அதாவது சஞ்சய் குமார் மிஸ்ரா வை தக்க வைப்பதற்காகவும், அதே நேரம் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தி லிருந்து தப்பிப்பதற்காகவும், பதவிக்காலத்தையே 5 ஆண்டுகளாக உயர்த்தி மோடி அரசு சட்டம் கொண்டு வந்தது. இதுவும் கண்டனங்களுக்கு உள்ளானது.
இதனிடையே, எஸ்.கே. மிஸ்ரா வுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பை எதிர்த்து, காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சமூக ஆர்வலரும், மத்தியப் பிரதேச மகளிர் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செய லாளருமான டாக்டர் ஜெயா தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில், நீதிபதிகள் விக்ரம்நாத், சஞ்சய் கரோல் ஆகி யோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மேலும் நீட்டிப்பு வழங்கப்படக்கூடாது என்ற உத்தரவு இருந்தபோதிலும் அவருக்கு 3-ஆவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது எப்படி? ஒரு குறிப்பிட்ட நபரின் பதவிக் காலத்தை மீண்டும் மீண்டும் நீட்டிப்பதன் காரணம் என்ன? அந்த ஒரு நபரால் மட்டுமே அந்த பதவிக் குரிய கடமையை செய்ய முடியுமா? அமலாக்கத்துறையில் அவரது வேலையைச் செய்யக்கூடிய வேறு ஆள் இல்லையா? சஞ்சய் குமார் மிஸ்ரா மட்டும் இவ்வளவு இன்றியமை யாதவராக ஏன் இருக்கிறார்? அப்படி யானால் அவர் ஓய்வுபெற்ற பிறகு அந்த பதவியின் நிலை என்னாகும்?” என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில், திங்களன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், “அமலாக்கத்துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. அதன் பிறகு அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது” என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.