சென்னை, மார்ச் 9 - மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் நடவடிக்கையை எடுக்கப் போவதில்லை என்று மின்வாரியமும் அமைச்சரும் அறிவித்ததால் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். ஒரேவீட்டில் பல்வேறு குடியிருப்புகளில் உள்ள மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்க வேண்டுமென்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் செய்த அறிவிப்பு பத்திரிகைகளில் பரவலாக வெளிவந்தது. அத்தோடு மின்வாரியத்தின் சார்பில் வீடுகளுக்கு 15 தினங்களுக்குள் மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்க வேண்டுமெனவும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி மின்வாரிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என சிபிஐ (எம்) கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகமும், தமிழ்நாடு மின்துறை அமைச்சரும் அப்படியொரு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என அறிவித்ததோடு, ஏற்கனவே வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டிருந்த நோட்டீசை திரும்பப் பெறுவது எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு ஏற்பட்ட குழப்பம் தவிர்க்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரக் கூடாது என தெரிவித்துக் கொள்வதோடு, சிபிஐ (எம்) கட்சியின் சார்பில் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு நடை பெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படு கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக (மின்விளக்கு, லிப்ட், மோட்டார்) உள்ள மின் இணைப்புகளுக்கு ஏற்கனவே வசூலித்து வந்த வீடுகளுக்கான மின் கட்டண விகிதத்தையே வசூல் செய்திட வேண்டுமெனவும் சிபிஐ(எம்) சார்பில் மின்வாரியத்தை வலியுறுத்துகிறோம் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.