ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்சய் சிங் அவர்கள் அமலாக்கப் பிரிவினரால் பலவந்தமாக கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்த வித ஆதாரமும் இல்லாமல் என்னை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கிறார்கள் என சஞ்சய் சிங் கூறியிருக்கிறார். நரேந்திர மோடி அரசின் தலைமையிலான ஆட்சியில் அமலாக்கப் பிரிவு இப்படி, பாஜக அரசின் அரசியல் எதிரிகளை திட்டமிட்டு கைது செய்து வருகிறது. அவர்கள் கூறும் பொய்க் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ளாவிட்டால், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி, அதன் அடிப்படையிலேயே கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். மோடி அரசின் ஏவலாளி போல அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட மத்திய விசாரணை முகமைகள் ஏவிவிடப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. மிகவும் அவமானகரமானது. இத்தகைய தாக்குதல்களை இடைவிடாமல் நடத்துகிற மோடி அரசு, இந்தியா - அதாவது அவர்கள் கூறுகிற பாரதத்தின் நலனுக்கு முற்றிலும் எதிரானது. அதை அகற்றும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.