வள்ளுவனைப் படி…
வள்ளுவனைப் படித்தவர் அவருக்கு காவி கட்டமாட்டார்.
அவருக்கு காவி கட்டுகிறவர்
மநுவை மட்டுமே படித்த மதவெறியரே!!
நீரின்று அமையாது உலகு இயற்கையைப் படி!
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை உணர்ந்து படி!
வாய்மை எனப்படுவது யாதென நீயும் படி
கற்றனைத்து ஊறும் அறிவு தொடர்ந்து படி!
குணம்நாடி குற்றமும்நாடி மிகைநாடி நீ படி!
அடுத்தது காட்டும் பளிங்கென நெஞ்சைப் படி!
இளைதாக முள்மரம் கொய்க என அறிந்து படி!
எண்ணியாங்கு எய்த திண்ணியராகப் படி!
அழுதகண்ணீரின் ஆற்றலை அறிந்து படி!
காலம் கருதி இடத்தாற் வினையாற்றப் படி!
சொல்லுக சொல்லைப் பயனுடைய படி!
நாவினால் சுட்டவடு ஆகாதபடி!
வினைத் திட்பம் என்பது மனத்திட்பம் என்றபடி
எண்ணித் துணிக கருமம் இழுக்கு அண்டாதபடி!
அன்பு அறிவு தேற்றம் அவாஇன்மை கொண்டபடி!
முகம்நக நட்பன்று அகம்நக நட்பைப் படி!
இனிய உளவாக இன்னாத கூறாதபடி!
ஊடலில் தோற்றவர் வென்றார் என்றபடி!
வள்ளுவனைப் படி! திருவள்ளுவனைப் படி!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றபடி!
-சு.பொ.அகத்தியலிங்கம்