states

காங்கேயம் அருகே குத்தகை விவசாயியின் வீட்டை இடித்து பொருட்களை வெளியே வீசி சாதி ஆதிக்க கும்பல் அட்டூழியம்

திருப்பூர், ஆக. 9 – திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே புறம்போக்கு நிலத்தில் குடி யிருந்து வந்த குத்தகை விவசாயி குடும்பத்தினரை காலி செய்ய வற்புறுத்தி 20 பேர் கொண்ட சாதி ஆதிக்க கும்பல் இரவு நேரத்தில் வீட்டைத் தகர்த்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நெய்க்காரம்பாளையத்தைச் சேர்ந்தவர் கே.சி.சிவா (வயது 60). குத்தகை விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா. நூறு நாள் வேலைக்குச் சென்று வருகிறார். இவர் களுக்கு அமுதா என்ற மகளும், பூபதி, விவேக் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் மகள் அமுதா, மருமகன், பேரன் உள்ளிட்டோர் சிவா வுடன் வசித்து வருகின்றனர். பூபதி முத்தூர் செல்லும் வழி கணேஷ் நகரிலும், விவேக் காங்கேயத்திலும் வசித்து வரு கின்றனர்.

கடந்த 14 வருடங்களாக சிவா வசிக்கும் வீடு நத்தம் புறம்போக்கு இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுத்திருப்பதாகவும், ஆனால் இன்னும் பட்டா தரவில்லை என்று சிவா கூறினார். எனினும் மின் இணைப்பு பெற்று மின் கட்டணம், வீட்டு வரி செலுத்தி வருகிறார். இதற்கிடையே இவரது வீட்டுக்குப் பக்கத்தில் வசித்து வரும் சுப்பிரமணி, பூங்கொடி குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு இடம் போதவில்லை என்று சொல்லி, சிவா  குடும்பத்தினர் வசித்து வரும் வீட்டை விட்டு  காலி செய்யும்படியும், அந்த இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

சாதி ஆதிக்க சக்திகள் மிரட்டல் 

உள்ளூரைச் சேர்ந்த சுப்பிரமணிக்கு ஆதரவாக சாதி ஆதிக்க சக்திகள் சிலரும் சேர்ந்து கொண்டு சிவா வீட்டைக் காலி செய்ய வேண்டும் என வற்புறுத்தி உள்ள னர். இது தொடர்பாக ஊர்க்கூட்டம் என்ற பெயரில் ஏற்கெனவே ஐந்து முறை அவர்கள் கூட்டம் போட்டு பேசி, சிவாவை அங்கு வரவழைத்து வீட்டைக் காலி செய்யக் கட்டாயப்படுத்தி உள்ளனர். சாதி ஆதிக்க கும்பல் நெருக்கடி கொடுத்த நிலையில், மூன்று வாரங் களுக்கு முன்பு சிவா, காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததுடன், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பி இருக்கிறார். இதற்கிடையே அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் தலையிட்டு சமரசம்  பேசி வேறு இடம் தருவதாகவும், புகாரை வாபஸ் பெறும்படியும் சிவாவிடம் கூறியிருக்கிறார்.

எழுதி வாங்கிய காவல் துறை

எனினும் முதல்வருக்கு புகார் அனுப்பிய நிலையில் காவல் துறையினர் சாதி ஆதிக்க பிரிவினரிடம் வீட்டை காலி செய்யச் சொல்லி வற்புறுத்தக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிய தாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாயன்று சாதி ஆதிக்க கும்பல் ஆறாவது முறையாக ஊர்க்கூட்டம் நடத்தி, சிவா வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என முடிவு செய்துள்ளனர். தோட்ட வேலைக்குச் சென்றிருந்த சிவா மாலை வீட்டுக்கு வராமல் தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன், காங்கேயத்தில் உள்ள தனது மகன் விவேக் வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளார்.

வீட்டை இடித்த 50பேர் கொண்ட கும்பல்

செவ்வாயன்று இரவு 11 மணியள வில், சுமார் 50 பேர் கொண்ட கும்பல் நெய்க்காரபாளையத்தில் உள்ள சிவா வின் வீட்டுக்குச் சென்று வீட்டின் முகப்புப் பகுதியை இடித்துத் தகர்த்துள்ளனர். அத்துடன் வீட்டின் பக்க வாட்டு ஜன்னல், கதவு ஆகியவற்றையும் உடைத்துள்ள னர். வீட்டின் மேற்கூரை ஓடுகளையும் உடைத்துப் பிரித்துள்ளனர். வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர், பண்ட பாத்திரங்கள், துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து வெளியே வீசியுள்ளனர். வீடு இடிக்கப்படும்போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ், காங்கேயம் நகர்மன்றத் தலைவர் சூரியபிரகாஷ் ஆகியோரும் சம்பவ இடத்தில் இருந்ததாக அந்த கிராமத்தினர் கூறினர்.

காவல்துறையின் பாரபட்சம்

காங்கேயத்தில் இருந்த சிவாவுக்கு, அவரது வீட்டை 50 பேர் கொண்ட கும்பல் இடித்து தகர்ப்பது குறித்து அண்டை வீட்டார் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல் அவசர உதவி எண் 100க்கு அழைத்து, வீடு இடிக்கப்படும் விபரத்தை சிவா கூறியுள்ளார். காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். எனினும் வீட்டை இடித்தவர்கள் யாரையும் பிடிக்கவோ, விசாரணை மேற்கொள்ளவோ இல்லை. சிவாவிடம் வீட்டிற்குச் செல்ல வேண்டாம், காலை நேராக காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுங்கள் என்று காவல் துறையினர் சொல்லி உள்ள னர். இடிக்கப்பட்ட வீட்டின் நிலையைப் படம் எடுப்பதற்கு சிவா தனது மகனை அனுப்பி இருக்கிறார். அங்கு சென்றபோது, காவல் துறையினர் படம் எடுக்கக் கூடாது, பத்திரிகையாளர்கள் மட்டும்தான் படம் எடுக்க வேண்டும் என்று சொல்லி அவரது மகனைத் தடுத்து அனுப்பி விட்டதாகவும் சிவா கூறினார்.

காரணம் என்ன?

சிவா சலவை தொழில் செய்யும் (வண்ணார்) சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் தனது குலத்தொழிலைச் செய்யாமல் வேறு வேலை செய்து வரும்  நிலையில், தங்கள் பேச்சுக்கு கட்டுப்படா மல், வீட்டைக் காலி செய்யாமல் அவர் இருந்ததால் ஆத்திரம் கொண்ட சாதி ஆதிக்க கும்பல் வெறிகொண்டு வீட்டைத் தகர்க்கும் வேலையில் ஈடுபட்டதாகவும் அப்பகுதி கிராம மக்கள் கூறினர். காங்கேயம் நகர்மன்றத் தலைவர் சூரியபிரகாஷ் நெய்க்காரபாளையத்தைச் சேர்ந்தவர். அவரும் சாதி ஆதிக்க  கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாக வும் கூறப்படுகிறது. ஏற்கனவே சூரிய பிரகாசின் நிலத்தில் கே.சி.சிவா குத்தகை விவசாயம் செய்துவந்த நிலையில் வீட்டை காலி செய்யும் பிரச்சனையில், தனது நில த்தில் வேலை செய்ய வேண்டாம் என்று சிவாவை தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர்

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப் பினர் கே.திருவேங்கடசாமி, தாலுகாக் குழு உறுப்பினர் தங்கவேல் ஆகியோர் நெய்க்காரபாளையத்திற்குச் சென்று இடிக்கப்பட்ட வீட்டைப் பார்வையிட்டனர். சிவா அங்கு இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்துக் கேட்டறிந்தனர். இந்த சம்பவத்தில் சாதி ஆதிக்க மனோ பாவத்துடன் வீட்டை இடித்த குற்றவாளி கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிவா குடும்பத்தாருக்கு நீதி வழங்க வேண்டும். அவர் குடியிருக்கும் வீட்டிற்கு அரசு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். காங்கேயம் காவல் நிலையத்தில் இது குறித்து சிவா புகார் பதிவு செய்துள்ள நிலையில் காவல் துறையினர் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.