சத்தீஸ்கரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் வடக்கே மத்தியப் பிரதேசத்தை ஒட்டி அமைந்துள்ளது கொரியா மாவட்டம். இதன் தலைமையகமான பைகுந்த்பூரைச் சுற்றியுள்ள பகுதியில் காலை 8.10 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் பைகுந்த்பூரிலிருந்து மேற்கு-வடக்கு திசையில் 16 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வாளர் அக்ஷயா மோகன் பட் கூறினார். நில அதிர்வு நடவடிக்கையால் ஏற்பட்ட சேதம் குறித்து, நிலைமையைக் கவனமாகக் கண்காணித்து, தெரிவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை
தற்போது குடியரசு துணைத்தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம், ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட் டுள்ளது. இதில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யாருடைய பெயரும் இதுவரை பரிசீலிக்கப் படவில்லை. ஆளும் பாஜக கூட்டணியும் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலை யில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், தில்லியில் ஜூலை 12 அல்லது 13-ஆம் தேதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில், காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
டிஆர்எஸ் கட்சியிலும் ஷிண்டேக்கள்; பாஜக மிரட்டல்!
ஏக்நாத் ஷிண்டே மூலம் உத்தவ் அரசைக் கலைத்தது போல இந்தியா முழுவதும் எதிர்க்கட்சி களுக்கு உள்ளேயே ஆள்பிடித்து ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றப் போவதாக பாஜக மிரட்டல் விடுத்து வருகிறது. அந்த வகையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை அந்த மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் மிரட்டியுள்ளார். “தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் கூட நிறைய ஷிண்டேக்கள் உள்ளனர் என நான் நினைக்கிறேன். சந்திரசேகர ராவ் கட்சியில் யார் வேண்டு மென்றாலும் ஏக்நாத் ஷிண்டேவாக வரலாம். அவரது மகன் கே.டி.ஆர்., மகள் கவிதா அல்லது மருமகன் ஹரீஷ் ராவாகக் கூட இருக்கலாம்” என்று தெலுங்கானா மாநில பாஜக தலைவரும் எம்.பி.யுமான பண்டி சஞ்சய் மிரட்டல் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்புங்கள்: ‘சாமி’ டுவீட்
“கோத்தபய மற்றும் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரும் சுதந்திரமாக நடைபெற்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டவர்கள். இத்தகைய சட்டப்பூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்க முடியும்? இதை அனுமதித்தால் நமது சுற்றுப்புறத்தில் உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது. ராஜபக்சே இந்திய ராணுவத்தின் உதவியைக் கேட்டுக் கொண்டால் நாம் கொடுத்து உதவ வேண்டும்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கோத்தபயவின் நிலை மோடிக்கும் ஏற்படும்!
“இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவுக்கு நேர்ந்த கதியை பிரதமர் நரேந்திர மோடியும் சந்திக்க நேரிடும்” என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ இட்ரிஸ் அலி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், “கொல்கத்தா சீல்டா மெட்ரோ ரயில் நிலைய திறப்பு விழாவிற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அழைக்காதது அநீதி என்று கூறியுள்ள இட்ரிஸ் அலி, மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோதுதான் இந்த திட்டம் தொடங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.