ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப். 27 - இடைத்தேர்தல்
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத்தேர்தலோடு, 6 மாநிலங்களில் காலியாக இருக்கும் சட்ட மன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதன்படி தமிழகத்தில் ஈரோடு கிழக்கு, அருணாச்சல பிரதேசத்தில் லும்லா, மேற்கு வங்கத்தில் சாகர்திகி, மகாராஷ்டிராவில் கஸ்பா பெத் மற்றும் சிச்வாட், லட்சத்தீவு, ஜார்க்கண்டில் உள்ள ராம்கர் ஆகிய தொகுதிகளுக்கும் பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் இந்த 7 தொகுதிகளின் வாக்கும், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயாவோடு சேர்த்து மார்ச் 2-ஆம் தேதியே எண்ணப்பட உள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவனின் மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வுமான திருமகன் ஈ.வெ.ரா. அண்மையில் கால மானதையொட்டி, இந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுதில்லி, ஜன. 18 - வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங் களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி யுள்ளது. நடப்பு 2023-ஆம் ஆண்டில் 9 மாநிலங் களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. இதில் நாகாலாந்து மாநிலத்திற்கு மார்ச் 12, மேகாலயா மாநிலத்திற்கு மார்ச் 15, திரிபுரா மாநி லத்திற்கு மார்ச் 22 தேதிகளில் சட்டமன்ற பதவிக்காலம் முடிவடைவதால், இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதி முதலில் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது.
அதன்படியே திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களுக் கான தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் புதனன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி திரிபுரா மாநி லத்திற்கு பிப்ரவரி 16-ஆம் தேதியும், நாகா லாந்து, மேகாலயா ஆகிய 2 மாநிலங் களுக்கும் பிப்ரவரி 27 அன்று ஒரே நாளிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதற் கான வேட்புமனுத் தாக்கல் திரிபுரா வில் ஜனவரி 21-ஆம் தேதியும், நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் ஜனவரி 31ஆம் தேதியும் துவங்குகிறது. வேட்புமனுவை திரும்பப் பெற திரிபுரா வுக்கு பிப்ரவரி 2ஆம் தேதியும், நாகாலாந்து, மேகாலயாவுக்கு பிப்ரவரி 10-ஆம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மூன்று மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை ஒரே தேதியில் மார்ச் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் தலா 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நாகா லாந்தில் 13.09 லட்சம், மேகாலயாவில் 21.61 லட்சம், திரிபுராவில் 28.13 லட்சம் என்ற எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் தில்லியில் புதனன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், “திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களின் நிலப்பகுதி மற்ற பகுதிகளை காட்டிலும் வித்தியாசமானது. எனவே இங்கு நடத்தப்படும் தேர்தல் ஒட்டுமொத்த நாட்டிற்கு முன்னுதாரண மாக விளங்கும். தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த விரும்புகிறது.
3 மாநிலங்களிலும் மொத்தம் 9,125 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட உள்ளன. இவற்றில் 80 சதவிகிதம் கிராமப்புறங்களில் இருக்கின்றன. மூன்று மாநிலங்களையும் சேர்த்து 70 சதவிகித வாக்குச்சாவடிகளில் கள நிலவரத்தை நேரலையில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள் ளது. பெண்கள், மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்கள் மட்டுமே கையாளும் வகையில் 376 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதிய அடிப்படை வசதிகள் கட்டாயம் செய்யப் பட்டிருக்கும். ஒரு வாக்காளர் கூட தவற விடாமல் கடைசி மைல் வரை சென்று தேர்தல் ஆணையம் வாக்குகளை பதிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார். திரிபுராவில் பாஜக ஆளும் கட்சியாக வும், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் திரி ணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பிரதான எதிர்க்கட்சிகளாகவும் உள்ளன. நாகாலாந்தில் 2018 தேர்தலில் நாகா மக்கள் முன்னணி (NPF) தனிப்பெரும் கட்சி யாக வந்தது. எனினும், பாஜக உதவியுடன் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி (NDPP) கூட்டணி ஆட்சி அமைத்தது. மேகாலயாவில், 2018 சட்டமன்றத் தேர்த லில் காங்கிரஸ் 21 இடங்களைப் பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. நாகாலாந்தைப் போலவே, இங்கும் பாஜக, தேசிய மக்கள் கட்சியுடன் (NPP) இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையிலேயே இந்த 3 மாநிலங்க ளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறி விக்கப்பட்டு உள்ளது.