மலப்புரம், மே 8- கேரளா மாநிலம் மலப்புரத்தை அடுத்த தானூர் அருகே ஓட்டும் புரத்தில் ஞாயிறன்று (மே 7) இரவு 7.30 மணியளவில், தூவல் தீர்த்தம் ஆற்றில் 37 சுற்றுலா பயணிகளுடன் படகு சென்று கொண்டிருந்தது. கடலும் ஆறும் சங்கமிக்கும் இடமான பரப்பனங்காடி கடற்கரை பகுதி அருகே சென்ற போது அந்த படகு திடீ ரென தலைக்குப்புற கவிழ்ந்தது. 8 மாத குழந்தை உட்பட 15 சிறார், 5 பெண்கள், 2 ஆண்கள் என 22 பேர் உயிரிழந்தனர். 15 நபர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திங்களன்று பகல் 12 மணியளவில் மீட்பு பணி நிறைவடைய இருந்த நிலையில் ஒரு சிறுவனை காண வில்லை என்கிற தகவல் கிடைத்ததும் மீண்டும் தேடுதல் நடந்தது. பின்னர் அந்த சிறுவன் கோழிக்கோடு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்தது. அதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணி யளவில் மீட்பு பணி நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது. மீட்பு பணியில் கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படையுடன் பொதுமக்கள் ஈடுபட்டனர். தானூரை சேர்ந்த படகு உரிமை யாளர் நாசர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். படகு பயணம் விதிமுறைகளை மீறி நடந்த தாக போலீசார் உறுதிசெய்துள்ளனர். படகு உரிமையாளர் மீன்பிடி படகை சுற்றுலா சேவைக்காக மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுற்றுலா படகுகளுக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ் இல்லாமல் படகு இயக்கப்பட்டதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த 2009 ஆம் ஆண்டு இடுக்கி மாவட்டம் தேக்கடி யில் மணிக்கவலா பகுதியில் ஜலகன்யகா என்ற படகு விபத்தில் சிக்கி 7 குழந்தைகள், 23 பெண்கள் உட்பட 45 பேர் பலியாகினர்.
குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
கேரளாவின் தானூரில் மே 7 ஞாயி றன்று மாலை நேர்ந்த படகு விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். பலி யான ஒவ்வொருவரின் பெயரிலும் அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். தானூரில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் முதல்வர் மேலும் கூறியதாவது: கேரளாவை உலுக்கிய பெரும் சோகம் தானூரில் நடந்துள்ளது. 22 பேர் உயிரிழந்தனர், 10 பேர் படுகாயம் அடைந்தனர், 5 பேர் நீந்தி தப்பினர், விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. படகு தொடர்பாக தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதால், தொழில்நுட்ப வல்லு நர்களை இணைத்து நீதிவிசாரணை ஆணையம் அமைக்கப்படும். இதனுடன், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காய மடைந்தவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும். இந்தக் குடும்பங்களுக்கு இது ஆறுதல் அல்ல. அந்த குடும்பத்தினரின் துயரில் நானும் பங்கேற்பதாக முதல்வர் தெரி வித்தார்.
மருத்துவமனையில் முதல்வர்
படகு விபத்து நடந்த தானூருக்கு முதல்வர் பினராயி விஜயன் மே 8 திங்க ளன்று காலை வந்தார். திரூரங்காடி தாலுகா மருத்துவமனைக்கு வந்த அவர், விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறு தல் கூறினார். அமைச்சர் அந்தோணி ராஜூவும் உடன் இருந்தார். பின்னர் பரப்பனங்காடியில் இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று உறவினர் களுக்கு ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து தானூரில் உள்ள அமைச்சர் அப்துர் ரஹ்மானின் முகாம் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் பி.ஏ.முஹம்மது ரியாஸ், வி.அப்துர் ரஹ்மான், கே.கிருஷ்ணன்குட்டி, ஏ.கே.சசீந்திரன், அகமது தேவர்கோவில் ஆகி யோர் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.