திருப்பூர், நவ. 28 - திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஓரு மாத காலத்தில் முதல் தவணையாக சேகரிக்கப்பட்ட 1811 தீக்கதிர் நாளிதழ் சந்தா தொகை ரூ.34 லட்சத்து 70 ஆயிரத்து 400 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 105ஆவது நவம்பர் புரட்சி தின செந்தொண்டர் பேரணியும், தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. திருப்பூரைத் திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் செந்தொண்டர் பேரணியின் முத்தாய்ப்பாக யுனிவர்சல் திரையரங்கம் அருகே நொய்யல் ஆற்றுக் கரையோரம் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில், திருப்பூர் மாநகரம், ஒன்றியப் பகுதிகள், தனி அரங்கங்களில் சேகரிக்கப்பட்ட தீக்கதிர் சந்தா தொகை விபரம் அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 1643 ஓராண்டு சந்தாவும், 168 ஆறு மாத சந்தாவும் என முதல் தவணையாக 1811 நாளிதழ்கள் சேகரிக்கப்பட்டு, அதற்குரிய சந்தா தொகை ரூ.34 லட்சத்து 70 ஆயிரத்து 400-ஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்திடம் ஒப்படைத்தார்.
தீக்கதிர் விற்பனைக்கு பாராட்டு
உடுமலைப்பேட்டையில் கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் 100 தீக்கதிர் தனிப் பிரதிகள் விற்பனை செய்யும் ரஷீத் அலி, மாநிலம் முழுவதும் செம்மலர், மார்க்சிஸ்ட், மகளிர் சிந்தனை உள்ளிட்ட மார்க்சிய இயக்க இதழ்களை விற்பனை செய்யும் கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் செம்மலர் மோகன் ஆகியோருக்கு பிருந்தா காரத் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஜெயபால் வரவேற்றார். கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர் என்.பாண்டி, கோவைப் பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஷகிலா உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இடைக் குழுச் செயலாளர்கள் பங்கேற்றனர். செந்தொண்டர் பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கா னோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக கட்சியின் பல்லடம் தாலுக்கா செயலாளர் ஆர்.பரமசிவம் நன்றி கூறினார். (ந.நி)