சென்னை, மே 8- நாடு முழுவதுமுள்ள 53 முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ. ஆக அதி கரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த 53 வழித் தடங்களிலும் ரயில்களின் வேகம் அதி கரிக்கப்படவுள்ளது. சென்னை எழும்பூர்- மதுரை, திருவனந்தபுரம்- கோழிக்கோடு போன்ற வழித் தடங்களும் இதில் அடங்கும். இதையடுத்து சென்னை-மதுரை ரயில் இனி 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படவுள்ளது. இதன் மூலம் பயண நேரம் கணிசமாக குறையும். மேலும் ரயில்களின் செயல் திறனும் மேம்படுத்தப்படும். 130 கி.மீ. வேகத்தை ரயில்கள் எட்டுவதற்கான உள் கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த பொது மேலாளர்களுக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் அரக்கோணம்- மைசூர், ஜோலார்பேட்டை- பெங்களூர், பெங்களூர்- மைசூர், கண்ணூர்- கோழிக்கோடு, திருவனந்தபுரம்- மதுரை, ஜோலார்பேட்டை, கோவை ஆகிய வழித் தடங்களிலும் வேகம் 130 கி.மீட்டராக அதிகரிக்கப்படுகிறது. சென்னை- பெங்களூர் - மைசூர் வந்தே பாரத் ரயில் கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு சென்னை- ஜோலார் பேட்டை பிரிவில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.ஜோலார்பேட்டை- பெங்களூர், பெங்களூர்- மைசூர் வழித் தடத்தில் வேகம் அதிகரிக்கப்பட்ட பிறகு பயண நேரம் இன்னும் குறையும். தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 5,081 கி.மீ. தூரத்துக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான பணிகள் தொடங் கப்பட்டன. இதில் 2,037 கி.மீட்டருக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.