states

மேற்குவங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து

கொல்கத்தா, ஜூன் 25 - மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகே இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்து நடந்துள்ளது. இதில், 12 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார். உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகே ஒண்டா ரயில் நிலையத்தில் ஞாயிறன்று அதிகாலை 4 மணிக்கு  முன்னால் சென்ற சரக்கு ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் 2 சரக்கு ரயில்களின் 12 பெட்டிகள் தடம்புரண்டன.  நல்வாய்ப்பாக இரண்டு சரக்கு ரயில்களும் காலியாக இருந்ததால் பெரியளவில் பொருட்சேதம், இழப்பு ஏற்படவில்லை. சரக்கு ரயில் ஓட்டுநர் ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் தடம்புரண்டு, சிதறி கிடப்பதால், காரக்பூர்- பங்குரா- ஆத்ரா மார்க்கத்தில் 14 ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதனால், மேற்கு மிட்னாபூர், பன்குரா, புருலியா, பர்துவான் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 3 ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படுவதாகவும், 2 ரயில்கள் பாதி தூரத்துக்கு இயக்கப்படுவதாகவும் தென்கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.  கவிழ்ந்து கிடக்கும் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் நிலைமை சீராகும் என கூறியிருக்கும் அதிகாரிகள், சரக்கு ரயில் சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதே ரயில் விபத்துக்கு காரணம்; பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில் மீது, சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்துள்ளது; மெயின் லைனில் செல்ல வேண்டிய சரக்கு ரயில், லூப் லைனில் சென்றுள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 290 பேர் வரை பலியான துயரம் இந்த மாதத்தின் துவக்கத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் விபத்து அன்றாட நிகழ்வாக மாறியிருக்கிறது.