states

‘வருமுன் காப்போம்’ திட்டத்தில் கண்புரை பரிசோதனை

சென்னை,ஜூலை 10- கண் அறுவை சிகிச்சை தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் நடைபெற்றது.  அகர்வால்ஸ் கண் மருத்துவக் குழுமத் தலைவர் அமர் அகர்வால் தலைமை வகித்தார். பொருளாளரும், ராஜன் கண் மருத்துவமனை தலைவருமான மோகன்ராஜன், அறிவியல் குழுத் தலைவர் ம`ஹிபால் எஸ்.சச்தேவ், அகில இந்திய கண் மருத்துவவியல் சங்கத்தின் அறிவியல் குழுத் தலைவர் லலித் வர்மா, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் மருத்துவவியல் துறை மருத்துவர் நம்ரதா ஷர்மா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கை தொடங்கிவைத்து தமிழக சுகாதாரத்  துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,“ இந்தியாவில் கண் பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. பார்வைத் திறன் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிப்பது கவலைக் குரியது”என்றார். ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால், பெரும்பாலான கண் பிரச்சினைகள் மற்றும் பார்வை இழப்புகளைத் தடுக்க முடியும் என்றும் இனி  நடைபெறும் முகாம்களில், ஏழைகள் பயன்பெறும் வகையில்,  கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனையும் சேர்க்கப்படும். கண்புரை இல்லாத தமிழ கத்தை உருவாக்குவதற்கு, கண் மருத்துவர்கள் இணைந்து  பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.