states

img

விழிஞ்ஞத்தில் இரண்டாவது சீனக் கப்பல் கிரேனுடன் வந்தது ‘ஷென்ஹுவா 29’

திருவனந்தபுரம், நவ.14- சீனாவில் இருந்து புறப்பட்ட இரண்டாவது கப்பல் திங்களன்று (நவ.13) விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்தது. சீனாவில் இருந்து வந்த ஷென்ஹுவா 29 கப்பல் மதியம் மூன்று மணிக்கு நங்கூரமிட்டது. வெள்ளியன்று காலை கேரள கடல் பகுதிக்குள் வந்த போதிலும், துறைமுகத்தில் நுழைவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு தாமதப்படுத்தியது. ஷென்ஹுவா 29’ அக்டோபர் 24 அன்று கிரேன்களுடன் சீனாவில் இருந்து புறப்பட்டது. திங்களன்று ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்த பிறகு பத்து மைல் தூரத்தில் இருந்து கப்பல் நிறுத்துமிடத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் விழிஞ்ஞம் துறைமுகத்தில் நிறுவப்பட உள்ள ஒரு (கப்பலில் இருந்து கரை இறக்கும்) கிரேன் செவ்வாயன்று இறக்கப்பட்டது. இந்த கப்பலில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இறக்க வேண்டிய இதுபோன்ற 2 கிரேன்களும் ஆறு யார்ட் கிரேன்களும் உள்ளன. இந்த கிரேன்களுடன் 17ஆம் தேதி முந்த்ரா துறைமுகத்துக்கு கப்பல் திரும்பும். சீனாவைச் சேர்ந்த ஷென்ஹுவா கப்பல் 6 யார்ட் கிரேன்களுடன் இம்மாதம் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் விழிஞ்ஞம் வந்தடைகிறது. சீனாவில் இருந்து முதல் கப்பல் அக்டோபர் 12ஆம் தேதி மூன்று கிரேன்களுடன் வந்தது. மற்றொரு கப்பல் டிசம்பரில் வந்து சேரும். தாய் கப்பல்களை நேரடியாக அணுகும் உலகின் மிகப்பெரிய கப்பல்கள் விழிஞ்ஞத்திற்கு வருவது முதலீட்டாளர்களை கவர்ந்து வருகிறது. பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. மே மாதத்திற்குள் துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும்.