திருவனந்தபுரம், செப்.29- போதைப் பழக்கத்திற்கு எதிரான கேரள அரசின் வெகுஜன தலையீடுகளை யுனிசெஃப் ஆதரிப்பதாக அமைச்சர் எம்.பி.ராஜேஷுடனான சந்திப்பின்போது யுனிசெப் குழுவினர் தெரிவித்தனர். போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் விரிவான திட்டங்கள் குறித்து குழுவினருக்கு அமைச்சர் விளக்கினார். அடிமட்ட தலையீட்டுத் திட்டம் மற்றும் உள்ளூர் கண்காணிப்புக் குழு ஆகியவை முன்மாதிரியானவை என்று குழு குறிப்பிட்டது. கேரளாவுடன் இணைந்து நீண்டகால போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விருப்பத்தை யுனிசெப் குழு பகிர்ந்து கொண்டது. ஹியூன் ஹீ பான், கே.எல்.ராவ், டாக்டர். மகேந்திர ராஜாராம், ஜோ ஜான் ஜார்ஜ் ஆகியோர் குழுவில் இருந்தனர்.
வறுமையை ஒழிப்பதற்கான கேரளாவின் தீவிர முயற்சிகளையும் குழு பாராட்டியது. இது வளர்ந்த நாடுகள் கூட பின்பற்றக்கூடிய ஒரு முன்மாதிரி. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மைக்ரோபிளானைத் தயாரிப்பது கடுமையான வறுமையைச் சமாளிப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளின் பணி பெருமைக்குரியது மற்றும் முன்மாதிரியானது என்று குழு தெரிவித்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் செய்த தலையீட்டை தாங்கள் நேரடியாகக் கண்டதாகவும், இந்தச் செயல்பாடு வேறு எங்கும் நினைத்துப் பார்க்க முடியாதது என்றும் குழு குறிப்பிட்டுள்ளது. நிலையான வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றுவதில் தங்களின் ஆர்வத்தையும் குழுவினர் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர்.