states

img

கேரள பட்ஜெட் 2024

திருவனந்தபுரம், பிப். 5- கேரளத்தின் பொருளாதாரம் வழிகாட்டும் பொருளாதாரமாக மாறி வருகிறது என்று குறிப்பிட்டு, சட்டமன்றத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திங்களன்று (பிப். 5) சமர்ப்பித்தார் நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால். இடதுசாரி அரசின் வளர்ச்சி மாடல் குறித்து சந்தேகம் எழுப்பியவர்களுக்கு கேரளத்தின் சாதனைகளே பதில் என்றும், பல்வேறு துறைகளில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தனது பட்ஜெட் உரையில் அமைச்சர் மேலும் கூறுகையில், எட்டு வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட கேரளம் இன்றைய கேரளம் அல்ல எனவும், மூன்று வருடங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை கேரளம் ஈர்க்கும்; அதேநேரம், ஒன்றிய அரசின் கடுமையான புறக்கணிப்பு உச்சத்தில் உள்ளது, குறைந்தபட்சம் இந்த புறக்கணிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தனித்து போராட தயாராக வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். 

சொந்த வருவாயில் சாதனை வளர்ச்சி
கேரளத்தின் சொந்த வருவாயில் சாதனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். வரி வசூலில் ஈடுபட்டுள்ள வரித்துறையை அமைச்சர் பாராட்டினார். “நான்கு ஆண்டுகளில் வரி வருவாய் இரட்டிப்பாகியுள்ளது. செலவினங்களில் ரூ. 30,000 கோடி அதிகரித்துள்ளது. அமைச்சர்களின் எண்ணிக்கை, செலவுகள், பயணங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அரசு தனது பொறுப்புகளை நிறைவேற்றும். 24 மணி நேரமும் செயல்பட கருவூலம் தயாராக உள்ளது. என்ன விலை கொடுத்தாலும் வளர்ச்சியும் நலத்திட்ட செயல்பாடுகளும் தொடரும். ஒன்றிய அரசின் புறக்கணிப்பு தொடர்ந்தால், கேரளாவில் ‘பிளான் பி’ உள்ளது. உக்ரைன்-பாலஸ்தீனப் போர் கேரளாவை பாதித்துள்ளது” என்றும் அமைச்சர் கூறினார். சுற்றுலாத் துறைக்கு அதிக திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், சுற்றுலாத் தொழில் முயற்சிகள் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

எஸ்சி/ எஸ்டி மேம்பாட்டுக்கு ரூ.3,835 கோடி
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் விரிவான வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்தார். பட்டியல் சாதியினர் மேம்பாட்டுக்கு ரூ.2976 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 9.81 சதவிகிதமாகும். கேரள மக்கள் தொகையில் 1.45 சதவிகிதத்தினரைக் கொண்டுள்ள பழங்குடியினர் மேம்பாட்டுக்கு ரூ.859 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பட்ஜெட்டில் 2.83 சதவிகிதமாகும்.  நிலமற்ற பட்டியல் சாதி குடும்பங்களுக்கு வீடு கட்ட தேவையான நிலம் வாங்க ரூ.170 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நிலமற்ற 5,000 பட்டியல் சாதிக் குடும்பங்களுக்கு உதவிகள் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

‘லைப்’ திட்டத்தில் 5 லட்சம் வீடுகள்
 ‘லைப்’ திட்டத்தின் கீழ் 2025 மார்ச்சுக்குள் 5 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். லைப் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1132 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக இதுவரை ரூ.17,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.10,000 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

லைப் வீட்டுத் திட்டத்தில் ஒன்றிய அரசின் முத்திரை அனுமதிக்கப்படாது. லைப் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டுவோரின் அடையாளத்தை அழிக்கும் வகையில் முத்திரை குத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. ஒன்றிய அரசின் முத்திரை (லோகோ) இல்லை என்றால் நிதியுதவி இல்லை என்பது ஒன்றிய அரசின் நிலைப்பாடு. இந்தப் பணத்தை கேரள அரசே செலவிடும் என்றும் அமைச்சர் கூறினார்.

‘கே ரயில்’  முயற்சிகள் தொடரும்
கேரளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார். விழிஞ்ஞத்தில் சீன மாதிரியில் சிறப்பு வளர்ச்சி மண்டலம் அமைக்க பரிசீலிக்கப்படும். விழிஞ்ஞம் துறைமுகத்தில் உலகின் மிகப்பெரிய தாய்க்கப்பல் நெருங்கும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

திருவனந்தபுரம் மெட்ரோவுக்கு விரைவில் ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்கும் என நம்புவதாக நிதியமைச்சர் தெரிவித்தார். ரயில்வே வளர்ச்சியில் கேரளாவை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், கே ரயிலை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

பட்ஜெட் இதர ஒதுக்கீடுகள் 

u  அடிப்படை வசதிகள் மேம்பாடு ரூ.500 கோடி
u  டிஜிட்டல் பல்கலைக் கழகத்திற்கு ரூ.250 கோடி
u  மீன்பிடித்தல் துறைக்கு ரூ.327 கோடி
u  சுற்றுலா துறையில் புதிய முதலீடுகள்
u  கேரளம் மருத்துவ மையமாகும்.

u  3 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு
u  25 புதிய தனியார் தொழில் பூங்காக்கள்
u  வேளாண்துறைக்கு ரூ.1,698.30 கோடி
u  வேளாண் துறையில் 2.36 வேலை வாய்ப்புகள்
u  ரப்பருக்கு ஆதார விலை ரூ.180 ஆக அதிகரிப்பு
u  குடும்ப ஸ்ரீக்கு ரூ.265 கோடி
u  பொதுக் கல்விக்கு ரூ.1,000 கோடி
u  உயர் கல்விக்கு ரூ.456.71 கோடி
u  பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.31 கோடி
u  போக்குவரத்து துறைக்கு ரூ.1,976 கோடி
u  அமைக்கப்படும் சாலைப் பணிகளுக்கு ரூ.1,000 கோடி
u  காருண்யா சுகாதார பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.678.54 கோடி\

கேரளத்தில் மாற்று ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் சம்பளத்துடன் ஒரு தவணை டிஏ

திருவனந்தபுரம், பிப். 5- கேரளத்தில் அரசு ஊழியர்களுக்கு ‘மாற்று ஓய்வூதியத் திட்டம்’ அமல்படுத்தப்படும்; பங்கேற்பு ஓய்வூதியத்துக்குப் பதிலாக  மாற்று ஓய்வூதியத் திட்டத்தை நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.  பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மை ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் கூறினார். அதை திருத்தம் செய்வது குறித்து ஆய்வு  செய்ய அரசு நியமித்த குழுவின் அறிக்கையை மேலும் ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய முறையை மாற்றி, ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு வழங்கிய பங்கை திரும்பப்  பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ‘உறுதிப்படுத்தப்பட்ட’ ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த திருத்தப்பட்ட திட்டம் வகுக்கப்படும். மற்ற மாநிலங்களில் உள்ள புதிய திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்து, கேரளத்தில் மாற்றுத்  திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவிட் காலத்தில் அரசு ஊழியர்களுக்கான சம்பள ஓய்வூதியத்தில் சீர்திருத்தம் செய்த மாநிலம் கேரளா. இந்தியாவில் இன்று பப்ளிக் சர்வீஸ்  கமிஷன்கள் மூலம் நடத்தப்படும் மொத்த ஆட்சேர்ப்புகளில் 42 சதவிகிதம் கேரளத்தில் தான் என்பது தெரியவந்துள்ளது. கேரளத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ரூ.57,000 கோடியை ஒன்றிய அரசு குறைத்துள்ள தால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம்.

இதில் ஒரு பகுதியாவது கிடைத்தால் நமது கடுமையான பிரச்சனைகளை தீர்க்க முடியும். இந்த நிலையிலும், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டி.ஏ. ஏப்ரல் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப் படும் என அமைச்சர் தெரிவித்தார்.