கேரளாவில் பிரதமர் மோடிக்கு கூடிய கூட்டம் என நடிகை சன்னி லியோனுக்கு கூடிய கூட்டத்தின் புகைப்படத்தை சங்பரிவாரத்தினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
பூமியின் கடைசி மற்றும் சிறந்த நம்பிக்கை: உலகில் அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும், மிகவும் சக்தி வாய்ந்த தலைவர், நம்மை ஆசிர்வதிப்பதற்காக அமெரிக்கா வந்துள்ளார் என்று பிரதமர் மோடி குறித்து அமெரிக்காவின் ’ தி நியூயார்க் டைம்ஸ்’ஏடு முகப்புப் பக்க செய்தி வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பாஜகவினர் புகைப்படம் ஒன்றை பரப்பினர்.
பிரதமர் மோடி உலகத் தலைவராக உயர்ந்துவிட்டார் என்பதற்கு இதுவே சாட்சி என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்தனர்.ஆனால், இவ்வாறு உலா வந்த புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை; வழக்கம் போல சங்பரிவாரங்களால் போட்டோஷாப் செய்யப்பட்ட மோசடி புகைப்படங்கள் என்பது சீக்கிரத்திலேயே வெளிச்சத்திற்கு வந்தது.
வடமாநிலங்களில் பாஜக அரசு செய்த நலத்திட்டங்கள் என வெளிநாடுகளில் கட்டப்பட்ட கட்டடங்கள், சாலைகள் மற்றும் ரயில் என பல புகைப்படங்களை போட்டோஷாப் செய்து பொய்யாக பரப்பி வருவது சங்பரிவாரத்தினரின் வழக்கம்.
அதுபோல, தற்போது இரண்டு நாள் பயணமாக கேரளாவிற்கு வந்திருக்கும் பிரதமர் மோடியை காண கொச்சியில் திரண்டிருக்கும் கூட்டம் என ஒரு புகைப்படத்தை சங்பரிவாரத்தினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.அப்புகைப்படத்தை ஆராய்ந்து பார்த்ததில் அது 2017-ஆம் ஆண்டு நடிகை சன்னி லியோனை காண திரண்ட கூட்டம் என்பது தெரிகிறது.
இதிலிருந்து, சங்பரிவாரத்தினர் தொடர்ந்து போட்டோஷாப் மூலமும், செய்திகளை தனக்கு தகுந்தார்போல் மாற்றி மக்களை ஏமாற்றும் வேலையும் மக்களிடையே அம்பலப்பட்டுள்ளது.