லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
அகமதாபாத், நவ.6- குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதி களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 5 முறை தொடர்ந்து வெற்றியை சுவைத்த பாஜக, 6-ஆவது முறையும் வெற்றிபெறு வதற்கான திட்டத்துடன் அனைத்து அஸ்திரங்களையும் பயன் படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தமுறை குஜ ராத் தேர்தல் பாஜக-வுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்று அரசியல் நோக்கர்கள்கருதுகின்றனர். இந்நிலையில், குஜராத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலைவாசி உயர்வு, வேலை யின்மைக்கு எதிரான கொதிநிலை மக்கள் மத்தியில் நிலவுவதாகவும், மாற்றம் வேண்டும் என்ற கருத்தும் அங்கு வலுவாக முன்னுக்கு வந்துள்ளதாகவும் லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
2013-14ஆம் ஆண்டில் நரேந்திரமோடி மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலில் நுழைந்த போது, அவர் ‘குஜராத் மாடலாக’ அதாவது ‘வளர்ச்சி யின் சின்னமாக’ சித்தரிக்கப்பட்டார். இப்போது, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு ‘வளர்ச்சியின் அடையாளம்’ என வர்ணிக்கப்பட்ட மோடி யின் குஜராத் இப்போது எப்படி இருக்கிறது..? ‘வளர்ச்சி’ -யால் மக்கள் வளம் பெற்றுள்ளார்களா? குஜராத் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குஜராத் வாக்காளர்கள் ‘வளர்ச்சி’-யை நினைத்து பெருமிதம் கொள்கிறார்களா...? இவை குறித்து, ‘லோக்நிதி - சென்டர் பார் தி ஸ்டடி ஆப் டெவலப்பிங் சொசைட்டிஸ் (CSDS)’ அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 10 முதல் அக்டோபர் 23 வரை இந்த ஆய்வு நடந்துள்ளது. நிகழ்தகவு விகிதாச்சார முறையின் மூலம் தோராயமாக 20 சட்டமன்றத் தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாதிரி சட்டமன்றத் தொகுதி களில் ஒவ்வொன்றிலும் நான்கு வாக்குச்சாவடிகள் விகிதம் 80 வாக்குச் சாவடிகளிலும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் இருந்து எஸ்ஆர்எஸ் முறையைப் பயன்படுத்தி (Simple Random Sample or SRS) தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 வாக்காளர்கள் வீதம் மொத்தம் 2,135 வாக்காளர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
குஜராத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற கள ஆய்வாளர்கள் வாக்காளர் களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று கருத்துக்களைப் பெற்றுள்ளனர். ஆய்விற்கான கேள்வித் தாள் குஜராத்தியில் தயாரிக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு வாக்காளரிடமும் கருத்துக்களைப் பெற ஆய்வாளர்கள் 20 முதல் 25 நிமிடங்கள் செலவழித்துள்ளனர். அரசியல் அறிவியலாளர் சுஹாஸ் பால்ஷிகர், லோக்நிதி நெட்வொர்க்கின் தேசிய ஒருங்கிணைப்பாள ரும் ஜெயின் பல்கலைக்கழக துணைவேந்தரும், அந்தப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் மற்றும் கல்விக்கான மையத்தின் இயக்குநராகவும் உள்ள சந்தீப் சாஸ்திரி மற்றும் பேராசிரியர் சஞ்சய் குமார், விபா அத்ரி, ஜோதி மிஸ்ரா, ஹிமான்ஷு கபூர், ரிஷிகேஷ் யாதவ், ஹிமான்ஷு பட்டாச்சார்யா மற்றும் தனஞ்சய் குமார் சிங் ஆகியோர் அடங்கிய லோக்நிதி குழு தரவு களை ஒருங்கிணைத்து பகுப்பாய்வு செய்துள்ளது. ஆய்வுக் களப்பணியை மகாஸ்வேதா ஜானி ஒருங்கி ணைத்துள்ளார். சித்தராஜ் பார்மர் ஆய்வு செய்துள்ளார்.
முக்கியப் பிரச்சனைகள்
இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள், குஜராத் மாதிரி வளர்ச்சியை கடுமையாக கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றன. யதார்த்தத்தில் வளர்ச்சியின் மாதிரியாக குஜராத் இல்லை என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றன. விலைவாசி உயர்வும், வேலையின்மையும் குஜராத் வாக்காளர்களின் முக்கியப் பிரச்சனைகளாக வெளிப்பட்டிருக்கின்றன. மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள், தாங்கள் வாக்களிக்கும் நேரத்தில் இரண்டு விஷயங்களை பிரதான மாக கவனத்தில் கொள்வோம் எனக் கூறியுள்ளனர். அவை 1. விலைவாசி உயர்வு, 2. வேலையின்மை. ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 2017-ஆம் ஆண்டு பாஜக கட்சி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது- மோடி பிரதமராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியிருந்த பின்னணியில் - குஜராத்தில் 7 பேரில் ஒருவர் மட்டுமே விலைவாசி உயர்வை தங்களின் முக்கியப் பிரச்சனை யாகக் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 2022 டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில், (அட்டவணை) கணக்கெடுப்பில் பங்கேற்ற வாக்காளர்களில் பாதிப்பேர் விலைவாசி உயர்வின் கடுமையைக் குறிப்பிட்டுள்ளனர். 15 சதவிகிதம் பேர் வேலையின்மையைக் குறிப்பிட்டுள்ள னர். 6 சதவிகிதம் பேர் வறுமையைப் பிரதானப்படுத்தி யுள்ளனர். 10 பேரில் 7 பேர் பொருளாதார நெருக்கடி யில் சிக்கியிருப்பதாக புலம்பியுள்ளனர். அண்மையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற சில மாநிலங்களில் வேலையில்லாத் திண்டாட்டம், விலை வாசி உயர்வு பிரச்சனைகள் எதிரொலித்தாலும் குஜரா த்தில் இப்பிரச்சனை உச்சத்தில் இருப்பது ‘லோக்நிதி’- யின் சென்டர் பார் தி ஸ்டடி ஆப் டெவலப்பிங் சொசை ட்டிஸ் (CSDS)’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்தக் கவலை குஜராத்தி சமூகத்தின் பெரும்பாலான பிரிவுகளிடையே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கிறது. நகர்ப்புற மக்களில் சரிபாதிப் பேர்களும், கிராமப்புற மக்களில் பாதிக்கும் மேற்பட்ட வர்களும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டத்தின் கடுமையை எதிரொலித்துள்ளனர்.எதிர்வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வாக்களித்தால், அல்லது வாக்களிக்கும்போது நீங்கள் கருத்தில் கொள்ளும் முக்கியப் பிரச்சனை எதுவாக இருக்கும்? என்ற கேள்விக்கு விலைவாசி உயர்வும், வேலையின்மையும்தான் என்று குஜராத் மக்கள் கூறியுள்ளனர்.
வாக்காளர்களின் மனநிலை
2017 2022
விலைவாசி உயர்வு 15% 51%
வேலையில்லா
திண்டாட்டம் 11% 15%
அரசின் செயல்பாடு - 6%
வறுமை/பசி 9% 6%
இதரப் பிரச்சனைகள் 65% 22%
2017 தேர்தலின்போது எழுப்பப்பட்ட இந்த கேள்விக்கு விலைவாசி உயர்வு முக்கியப் பிரச்சனை என்று 15 சதவிகிதம் பேர் கூறியிருந்த நிலையில், 2022 தேர்தல் நேரத்தில், மிக அதிகபட்சமாக 51 சதவிகிதம் பேர் விலைவாசி உயர்வை முக்கியப் பிரச்சனையாக எதிரொலித்துள்ளனர். அதேபோல 2017 தேர்தலில் வேலையின்மையை 11 சதவிகிதம் பேர் மட்டுமே பிரச்ச னையாக கூறியிருந்த நிலையில், 2022-இல் 15 சத விகிதம் பேர் வேலையின்மையை தாங்கள் எதிர்கொள் ளும் முக்கியப் பிரச்சனையாக தெரிவித்துள்ளனர். அண்மையில் தேர்தல் நடைபெற்ற மற்ற மாநி லங்களில் விலைவாசி உயர்வு இவ்வளவு பெரிய பிரச்சனையாக முன்னுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோவாவில் 3 சதவிகிதம் பேர், பஞ்சாப்பில் 2 சதவிகிதம் பேர், உத்தரப்பிரதேசத்தில் 6 சதவிகிதம் பேர், உத்தரகண்ட்டில் 6 சதவிகிதம் பேர் என்ற அளவிலேயே விலைவாசி உயர்வு முக்கியப் பிரச்ச னையாக முன்வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், குஜராத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக 51 சதவிகிதம் என்ற அளவில் இருக்கிறது. இதேபோல குஜராத்தில் வேலையில்லாத் திண்டா ட்டம் முக்கியமான பிரச்சனை என்று 15 சதவிகிதம் பேர் கூறியிருப்பதும் மற்றைய மாநிலங்களில் எழாத பிரச்சனையாகும். கோவாவில் 8 சதவிகிதம், பஞ்சாப்பில் 9 சதவிகிதம், உத்தரப் பிரதேசத்தில் 7 சதவிகிதம், உத்தர கண்டில் 14 சதவிகிதம் என்ற அளவிலேயே வேலை யின்மையை முக்கியப் பிரச்சனையாக மக்கள் கூறியிருந்தனர்.
குஜராத் கோவா பஞ்சாப் உ.பி. உத்தர்கண்ட்
விலைவாசி உயர்வு 51% 3% 2% 6% 6%
வேலையில்லா
திண்டாட்டம் 15% 8% 9% 7% 14%
அரசின் செயல்பாடு 6% 7% 7% 10% 9%
எனவே, இன்றைய தேதியில் விலைவாசி உயர்வும், வேலையின்மையும் ஏனைய மாநிலங்களை விடவும் குஜராத்தில் அதிமுக்கியப் பிரச்சனையாக இருப்பது லோக்நிதியின் ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. இவைதவிர வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் முக்கியப் பிரச்சனையாக எவற்றை பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு விலைவாசி உயர்வை 84 சதவிகிதம் பேரும், வேலையில்லாத் திண்டாட்டத்தை 77 சதவிகிதம் பேரும் குறிப்பிட்டுள்ளனர். 52 சதவிகிதம் பேர் மாற்றம் வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்துத்துவாவை 50 சதவிகிதம் பேரும், நோய்த் தாக்கத்தை 41 சதவிகிதம் பேரும், சாதியப்பாகுபாட்டை 35 சதவிகிதம் பேரும், பில்கிஸ் பானு வழக்கை 28 சதவிகிதம் பேரும், பண்டிதர் (ஓபிசி) கோரிக்கையை 14 சதவிகிதம் பேரும் முக்கியப் பிரச்சனையாக குறிப்பிட்டுள்ளனர்.
சாமானியர்களுக்கு நிவாரணம்
இலவச மின்சாரம், கட்டணமில்லா சேவைகள், மானி யங்கள் மற்றும் பணப் பலன்கள் போன்ற ஜனரஞ்சக மான வாக்குறுதிகள் (கொள்கைகள்) மாநிலத்தின் பொரு ளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு கேடானவையா? அல்லது இந்த பணவீக்க காலத்தில் சாமானியர்களுக்கு நிவாரணம் அளிக்க இத்தகைய கொள்கைகள் அவசியமா? என்ற கேள்விக்கும் லோக்நிதி ஆய்வில் பதில் பெறப்பட்டுள்ளது. அதில், இலவசங்கள் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு கேடு என்று அனைத்துத் தரப்பிலும் 13 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். கட்சிகள் அள வில் காங்கிரசில் 8 சதவிகிதம் பேர், பாஜக-வில் 68 சத விகிதம் பேர், ஆம் ஆத்மி கட்சியினர் 15 சதவிகிதம் பேர், பிற கட்சியினர் 9 சதவிகிதம் பேர் இலவசங்கள் வளர்ச்சிக்கு கேடு என்று கூறியுள்ளனர்.
குஜராத் தேர்தலுக்கு வாக்காளர்கள் மிகவும் முக்கியமானதாக நினைக்கும் பல்வேறு பிரச்சனைகள்
விலைவாசி உயர்வு 84%
வேலையில்லா திண்டாட்டம் 77%
மாற்றம் தேவை 52%
இந்துத்துவா 50%
நோய்த்தாக்கம் 41%
சாதியப்பாகுபாடு 35%
பில்கிஸ் பானு வழக்கு 28%
பண்டிதர் (ஓபிசி) கோரிக்கை 14%
சாமானியர் களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அவசியம்தான் என்று அனைத்துத் தரப்பிலும் 46 சதவிகிதம் பேர் வரவேற்றுள்ளனர். கட்சிகளில் காங்கிரசில் 26 சதவிகிதம் பேர், பாஜக-வில் 42 சதவிகிதம் பேர், ஆம் ஆத்மியில் 26 சதவிகிதம், பிற கட்சிகளில் 6 சதவிகிதம் பேர் இலவசங்களை வரவேற்றுள்ளனர். இலவசங்கள் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றா லும் அவற்றை வழங்குவது அவசியம் என்று இரண்டு கருத்தையும் ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் 29 சதவிகிதம் பேர். இது கட்சிகள் மட்டத்தில் காங்கிரசில் 18 சத விகிதம், பாஜக-வில் 49 சதவிகிதம் ஆம் ஆத்மியில் 21 சதவிகிதம், பிற கட்சிகளில் 12 என்ற அளவில் உள்ளது. கருத்துச் சொல்வது கடினம் என்று 12 சதவிகிதம் பேர் கூற, கட்சிகளில் இந்த சதவிகிதம் காங்கிரசில் 24, பாஜக -வில் 41, ஆம் ஆத்மி-யில் 17, பிற கட்சியினர் மத்தியில் 18 என்ற அளவில் உள்ளது.
மாற்றத்துக்கு ஆதரவு
இவ்வாறு குஜராத் மாநில மக்கள் விலைவாசி உயர்வையும், வேலையின்மையையும் முக்கியப் பிரச்சனையாக கூறியிருந்தாலும் குஜராத் தேர்தல் பிரச் சாரத்திலும், வாக்களிக்கும் நாளிலும் அது எத்தகைய தாக்கத்தை உருவாக்கும் என்ற கேள்வியை லோக்நிதி ஆய்வு எழுப்புகிறது. பொருளாதார நிலைக்கு ஆளும் கட்சிதான் காரணம் என்று வாக்காளர்களை நம்ப வைப்ப தற்கு எதிர்க்கட்சிகளுக்கு புதிய உத்திகள் தேவைப்படும் என்றும் அதேபோல பொருளாதார நெருக்கடி, வேலை யின்மை ஆகியவற்றை வாக்காளர்களிடமிருந்து மறக்கடிக்க பாஜகவுக்கும் அசாதாரண அரசியல் திறமை தேவைப்படும் என்று அது கூறுகிறது. “விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய இரண்டிற்கும் ஆளும் கட்சி மீது பழி சுமத்தி வாக்கா ளர்களை நம்ப வைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்துவிட்டன என்பதை கடந்த சில தேர்தல்களின் சான்றுகள் தெரிவிக்கின்றன” என்பதை யும் லோக்நிதி ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
பொருளாதாரம் தவிர்த்து சில குறிப்பிட்ட பிரச்சனை களில் ‘மாற்றம்’ தேவை என்ற கருத்தும் முன்னுக்கு வந்துள்ளது. ‘மாற்றம்’ என்ற சொல்லிற்கு (கணிசமான முக்கியத்துவம்) 52 சதவிகித ஆதரவும் உள் ளது. “இந்துத்துவா” முழக்கமும் தேர்தல் களத்தில் (50 சதவிகிதம்) முக்கியப் பிரச்சனையாக உள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குஜராத் மக்களின் முக்கியப் பிரச்சனை என்பதை ஆய்வுகள் காட்டினாலும், தேர்தல் களத்தில் முன்வைக்கப்படும் இதர வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிப்பார்களா? அல்லது பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக வாக்களிப் பார்களா? என்பதைப் பொறுத்தே குஜராத் தேர்தல் முடிவு கள் அமையும் என்று லோக்நிதி ஆய்வு கூறுகிறது.