பா ஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர், தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சம்பளப் பாக்கி கேட்ட தலித் இளைஞர் வாயில் செருப்பைத் திணித்து தாக்கிய கொடூர சம்பவம் ஒன்று அங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான மோர்பியில் வெளிநாடுகளுக்கு டைல்ஸ் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான ராணிபா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒன்றை விபூதி படேல் என்ற பெண் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் நிலேஷ் தல்சானியா என்னும் 21 வயது தலித் இளைஞர் அக்டோபர் 2 அன்று பணியில் சேர்ந்திருக்கிறார். விளக்கம் ஏதுமின்றி அக்டோபர் 18 அன்று பணியிலிருந்து நீக்கியுள்ளது ராணிபா இண்டஸ்ட்ரீஸ். தான் பணியாற்றய 15 நாட்களுக்கான ஊதியத்தை கேட்டு விபூதி படேலுக்கு போன் செய்துள்ளார் தல்சானியா. ஊர் திரும்பியதும் நேரில் வந்து சம்பளத்தை பெற்றுச் செல்லுமாறு விபூதி படேல் கூறியுள்ளார். ஆனால் பணம் வந்தபாடில்லை. இதனால் தனது சகோதரர் மெஹுல், பக்கத்து வீட்டுக்காரரான பவேஷ் மக்வானா ஆகியோருடன் டைல்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு புதனன்று தல்சானியா சென்றார். இங்கே வந்து சம்பளம் கேட்கிறாயா? என்று கூறி அங்கு இருந்த விபூதி படேலின் அடியாட்கள் 4 பேர் கொண்ட கும்பல் தல்சானியாவையும் அவருடன் வந்தவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளது. தொடர்ந்து விபூதி படேல் தனது பெல்ட் மற்றும் செருப்பை கழற்றி தல்சானியாவை சாதிய அவதூறு வார்த்தைகளுடன் தாக்கியுள்ளார். மேலும் தல்சானியாவின் வாயில் தனது செருப்பைத் திணித்திருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து மோர்பி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ள நிலையில், விபூதி படேல் மற்றும் அடியாட்கள் 4 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளோடு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.