போலிச்சாமியார் நித்தியானந்தா தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அயல்நாட்டு பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு அருகே பிடதியில் தங்கி ஆசிரமம் நடத்தி வந்த நித்தியானந்தா பாலியல் புகாரில் சிக்கியதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமினில் வெளிவந்த நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டில் இருப்பதாக கூறி அவ்வப்போது யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சாரா லேண்டரி என்ற வெளிநாட்டு பெண், பெங்களூரில் உள்ள பிடதி காவல்நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அதில், 'கைலாசா என்ற நாட்டில் நித்தியானந்தாவும், அவரது சீடர்களும் அங்குள்ள பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் தொந்தரவு அளிக்கின்றனர். எனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார்' என கூறி உள்ளார்.
அதை பார்த்த பிடதி போலீசார், 'இது போன்ற, மின்னஞ்சல் புகார்களை ஏற்க முடியாது. அதனால் நீங்கள் எந்த பயமும் இல்லாமல் இந்தியாவின் ஏதாவது ஒரு காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளியுங்கள்' என பதில் அனுப்பி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து சாரா லேண்ட்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் நித்தியானந்தா மற்றும் அவரது சீடர்கள் கைலாசாவில் உள்ள தங்கள் மாணவிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். நித்தியானந்தாவின் கைலாசா ஆசிரமம் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.