கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உடுப்பி அரசு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டன. இதை அடுத்து அப்போதைய பாஜக ஆட்சியில், மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் ஹிஜாப் தடை செல்லும் என உத்தரவிடப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த தடை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 18இல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். ஒரு நீதிபதி, உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் எனவும் மற்றொரு நீதிபதி செல்லாது எனவும் தீர்ப்பளித்தனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். மேலும், உணவு மற்றும் உடை என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது; அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.