states

img

கர்நாடகாவில் உள்ள பள்ளி வளாகத்தில் ஆயுத பயிற்சி முகாம்- பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது புகார்

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் நடைபெற்ற ஆயுத பயிற்சி முகாம் தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமேலவை உறுப்பினர் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவான இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) இந்தப் புகாரை அளித்துள்ளது. புகாரில் முகாமை நடத்திய பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், இளைஞர்கள் துப்பாக்கிகள் மற்றும் திரிசூலங்களுடன் காட்சியளிக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது.

குடகு மாவட்டம் பொன்னம்பேட்டையில் உள்ள சாய் சங்கர் கல்வி நிறுவனத்தில் மே 5 தேதி முதல் 11 தேதிவரை இந்த முகாம் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு காவல்துறை அனுமதி பெறாமல் நடத்தப்பட்டிருப்பதாக காவல் கண்காணிப்பாளர் எம்.ஏ. ஐயப்பா தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் இது போன்ற முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த நிகழ்வுகுறித்து சமூக வலைதளங்கள் மூலமாக தெரியவந்தது. இது தொடர்பாக இதுவரை எந்த புகாரையும் காவல்துறையினர் பதிவு செய்யவில்லை.

அனுமதியின்றி எவ்வாறு இந்த நிகழ்வு நடத்தப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்க கோரி பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட பொதுக்கல்வி துணை இயக்குநர் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

”அவர்கள் (ஏற்பாட்டாளர்கள்) எங்களிடம் அனுமதி கோரவில்லை; நாங்களும் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. வழக்கமாக பள்ளிகளில் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். ஆனால், ஆயுத பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவதில்லை” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், முகாம் நடத்தப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பஜ்ரங் தளத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் ரகு சுலேஷ்பூர், ”116 பேர் இந்த முகாமில் கலந்து கொண்டனர். பயிற்சியில் ஏர்கன் தான் பயன்படுத்தப்பட்டது அதற்கு அனுமதி தேவையில்லை.” என்று கூறியுள்ளார்.

மேலும், ”விநியோகிக்கப்பட்ட திரிசூலங்கள் கூர்மையானவை அல்ல. தற்காப்பு பயிற்சியின் ஒரு பகுதியாக தான் ஏர்கன் பயன்படுத்தப்பட்டது. பஜ்ரங் தளத்தின் எதிர்கால நடவடிக்கைகளில் ஈடுபட செயல்பாட்டாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

”ஆயுத பயிற்சி தவிர லவ் ஜிகாத், கால்நடை படுகொலை போன்ற தலைப்புகளில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன” என்று அவர் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் சில நாட்களுக்கு முன்பு வகுப்புமோதலை உருவாக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்று சங்-பரிவார அமைப்பினால் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு பெரிய அளவில் மாநிலம் முழுவதும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பொருட்டு பதற்றையும், மோதலையும் உருவாக்கினர். பின்பு, ஹலால் செய்யப்பட்ட உணவுகளை விற்க கூடாது என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், தற்போது சங்-பரிவாரத்தினர் பள்ளி, வளாகத்தில் மாணவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்தது வகுப்புவாத கலவரங்களை நடத்துவதற்கான திட்டமிடலாகவே இது பார்க்கப்படுகிறது.