states

img

புல்டோசரால் வீடுகளை இடிப்பதற்கு எந்தச் சட்டமும் இல்லை - உயர்நீதிமன்றம்

புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடிப்பதற்கு எந்த குற்றவியல் சட்டமும் பரிந்துரைக்கவில்லை என்று கவுகாத்தி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட மீன் வியாபாரி சஃபிகுல் இஸ்லாம் (39) என்பவர் விசாரணை காவல் நிலையத்தில் மரணமடைந்தார். இதை அடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் படத்ராவா காவல் நிலையத்துக்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் இருப்பதாகக் கூறி சஃபிகுல் உட்பட 6 பேரின் வீடுகளை புல்டோசர்களைக் கொண்டு மாவட்ட நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக கவுகாத்தி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம்.சாயா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ”முக்கிய வழக்குகளை விசாரணை செய்யும்போதும், தேடுதல் என்ற பெயரில் புல்டோசரை கொண்டு வீடுகளை இடிப்பதற்கு எந்த குற்றவியல் சட்டமும் பரிந்துரைக்கவில்லை. ஒரு வீட்டில் சோதனை நடத்துவதற்கும் அனுமதி தேவை.  நாளை உங்களுக்கு ஏதாவது தேவை என்றால், என்னுடைய நீதிமன்ற அறையையும் இடித்துவிட்டு தேடுதல் நடத்துவீர்களோ?” என்று கடுமையான கேள்விகளை எழுப்பினார். மேலும், இந்த வழக்கை டிசம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.