states

img

இந்திய பங்குச் சந்தையில் ரூ. 36,500 கோடி மோசடி

இந்திய பங்குச் சந்தையில் ரூ. 36,500 கோடி மோசடி

கையும் களவுமாக சிக்கிய அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் “ஜேன் ஸ்ட்ரீட்” என்ற வர்த்தக நிறுவனம் 2000ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. 45 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் 8,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். உலகளவில் அறியப்படாத நிறுவனமாக இருந்தாலும், கடந்தாண்டு ரூ. 1.75 லட்சம் கோடி (20.5 பில்லியன் டாலர்) வருவாய் ஈட்டியுள்ளது. இந்நிலையில், இந்திய பங்குச் சந்தையில் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் ரூ.36,500 கோடி மோசடி செய்துள்ளதாக செபி கண்ட றிந்துள்ளது. இதுதொடர்பாக செபி அளித்த தகவலின்படி, “2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 2025 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஆப்ஷன் வர்த்தகத்தில் மட்டும் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் ரூ. 36,671 கோடி (5 பில்லியன் டாலர்கள்) வருவாய் ஈட்டியுள்ளது. இதில், ரூ.4,843 கோடி சட்டவிரோதமாக சம்பாதித்துள்ளது. குறிப்பாக ஜனவரி 2023 முதல் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை வெவ்வேறான மாறுபட்ட 21 வேலை நாட்களில் நிப்டி மற்றும் பேங்க் நிப்டிகளில் ஜேன் ஸ்ட்ரீட் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.

மொத்த பங்குச் சந்தையையும் பாதிக்கும்

ஸ்டாக் ரிக்கிங் என்று சொல்லப்படக்கூடிய, காலையில் அதிகளவிலான பங்குகளை வாங்கி அவற்றுக்கு அதிக மதிப்பு இருப்பது போல் காட்டிவிட்டு, அடுத்த நாள் அதை விற்றுவிட்டு அதிக முதலீடு பார்த்ததால், ஜேன் ஸ்ட்ரீட் கையும் களவுமாக சிக்கியுள்ளது. இது ஆப்ஷனல் வர்த்தகர்களை மட்டுமின்றி மொத்த பங்குச் சந்தையையும் கடுமையாகப் பாதிக்கும்.  ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு இண்டெக்ஸ் ஆப்ஷன் மூலம் ரூ.44,358 கோடி லாபமும் பங்குகளில் ரூ.7,208 கோடி மற்றும் இண்டெக்ஸில் ரூ.191 கோடி இழப்பும், ரூ.288 கோடி பண இழப்பும்  ஏற்பட்டுள்ளது.  நிகர லாபமாக ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு ரூ. 36,671 கோடி லாபம் கிடைத்துள் ளது. சட்டவிரோதமாக ரூ.4,843 கோடி கிடைத்திருக்கிறது” என செபி கூறியுள்ளது. இந்நிலையில், இந்த முறைகேடு சம்பவம் எதிரொலியாக ஜேஎஸ் முதலீடுகள், ஜேஎஸ் 12 முதலீடுகள் பிரைவேட் லிமிடெட், ஜேன் ஸ்ட்ரீட் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட், ஜேன் ஸ்ட்ரீட் ஆசியா டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குகளை வாங்க விற்கத் தடைவிதித்து செபி உத்தரவிட்டுள்ளது.