states

img

வன்முறைக்கு எதிராக பழங்குடி மாணவர்கள் பேரணி

இம்பால், ஜூன்,25- மணிப்பூர் வன்முறைக்கு எதிராக பழங்குடியின மாணவர் குழு சவப்பெட்டி பேரணி நடத்தியது.  வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நிகழ்ந்து வரும் வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், 3,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள அவல நிலை அரங்கேறி உள்ளது. பாதுகாப்பு படைகள், ராணுவம் குவிப்பு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுவார்த்தை, அனைத்துக்கட்சி கூட்டம் என பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் வன்முறையை கட்டுப்படுத்த இயலவில்லை. உள்நாட்டுபோர் அளவில் வன்முறை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சனியன்று பழங்குடியின மாணவர்கள் குழு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள லம்கா பகுதியில் கருப்பு உடை அணிந்து “அமைதி சவப்பெட்டி பேரணி” நடத்தினர். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்த பேரணியின் பொழுது,”வன்முறையில் உயிரிழந்த பழங்குடியினர் உடல்களை முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும்” என கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.