states

img

‘தமிழில் படித்ததன் காரணமாகவே விண்வெளி துறையில் சாதிக்க முடிந்தது’

பெங்களூரு, டிச. 26 - தமிழ் வழியில் படித்ததால்தான், விண்வெளித்துறையில் தன்னால் சாதிக்க முடிந்தது என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கர்நாடக தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் ஞாயிறன்று தமிழ்ப் புத்தக திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவை, விண்வெளித்துறை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையர் ராம்பிரசாத் மனோகர், பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தின் முதுநிலை விஞ்ஞானி தவமணி, சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் ஹர்ஷத், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் ஆனந்த்குமார் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் தொடங்கி வைத்தனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உரையாற்றினார். அப்போது, “புதிய முயற்சியாக, புதிய நம்பிக்கையாக இன்று ஆரம்பித்துள்ள முதல் தமிழ்ப் புத்தக திருவிழா உண்மையில் நம்பிக்கை தருகிறது.

தமிழ் எனது அடையாளம், தமிழ் எனது முகம் என்று ராம்பிரசாத் மனோகர் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். எனது முகவரி தமிழகம் என்றாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பெங்களூருவில்தான் உள்ளேன். நான் எழுதிய 7 புத்தகங்களும் பெங்களூருவில் வைத்துத்தான் எழுதப்பட்டது. நமது தாய்மொழியை மறக்கக் கூடாது. வேர்களாக இருக்கும் மொழியை மறக்கக் கூடாது. அந்த மொழி நமது தாய். அந்தத் தாய்மொழிதான் உயரத்தை தொட உதவி உள்ளது. நான் முழுக்க படித்தது எனது சொந்த ஊரான கோயம்புத்தூரில்தான். நான் படித்தது தமிழ்வழியில்தான். தமிழில் படித்து விண்வெளித் துறையில் சாதித்தீர்களா என்று என்னிடம் நிறைய பேர் கேட்டு உள்ளனர். அப்போது, தமிழில் படித்ததால்தான் நான் சாதித்தேன் என்று அவர்களிடம் கூறியிருக்கிறேன்” என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். முன்னதாக பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையர் ராம்பிரசாத் மனோகர் பேசும்போதும், இதேபோல தாய்மொழி வழி கல்வியை வலியுறுத்தினார். தானும் தமிழ் வழியில் படித்ததால்தான் ஐஏஎஸ் அதிகாரி ஆனேன் என்று கூறினார். மாணவர்களிடையே தமிழைக் கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும், பெங்களூரு புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தலா ரூ.100 மதிப்புள்ள புத்தக அன்பளிப்புச்சீட்டு அளிக்கப்படுகிறது.  டிசம்பர் 25 அன்று துவங்கிய தமிழ்ப் புத்தகத் திருவிழா தொடர்ந்து எட்டு நாட்களுக்கு நடைபெறுகிறது.