கராகஸ், செப். 25- சீனாவின் சர்வதேச வறுமைக் குறைப்பு மையத்து டன் இணைந்து வறுமை மற்றும் சமத்துவமின்மையை நீக்க புதிய சமூகத் திட்டத்தை அறிவித்துள்ளதாக வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது. சமத்துவம் மற்றும் அர்த்தமுள்ளவகையில் வாழ்க்கையை உறுதிப்படுத்த “மகிழ்ச்சிக்கான பணி” திட்டம் துவங்க தயாராக உள்ளது என்றும் சமத்துவ மின்மைக்கு எதிரான போராட்டத்தை மேம்படுத்துவ தும் வறுமை ஒழிப்புமே இதனுடைய முக்கிய நோக்கம் என்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கூறி யுள்ளார். 1981 ஆம் ஆண்டு, உலக வங்கி கணக்கீட்டின்படி கிட்டத்தட்ட 90 சதவீத சீன மக்கள் வறுமைக் கோட்டி ற்குக் கீழ் இருந்தனர். ஆனால் 2019 இல் இந்த எண்ணிக்கை ஒரு சதவீதமாக குறைந்தது. அதற்கு அடுத்த ஆண்டு 2020 இன் இறுதியில் சீனா வறுமை ஒழிப்பை அறிவித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி 1980 முதல் 85 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமை யிலிருந்து மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்று செயல்பட்டுள்ளது என ஜனாதிபதி மதுரோ தேசிய வானொலியில் உரையாற்றும் போது தெரிவித்தார். நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் விரைவான தொழில்மயமாக்கலுடன் இணைந்த சீனாவின் வறுமை ஒழிப்பு உலகளவில் வெற்றி பெற்றதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூகப் பொரு ளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு தெற்குலக நாடுகளுடன் கூட்டணியையும் உருவாக்கியுள்ளது என்றும் கூறினார். வெனிசுலாவின் இந்த திட்டம், ஜனாதிபதி மதுரோ வின் சமீபத்திய சீனப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அப்பயணத்தில் ஜனாதி பதி ஜி ஜின்பிங்கை சந்தித்து “அனைத்துச் சூழலிலும் ஒத்துழைப்பு வழங்குதல்” என்பதன் அடிப்படையில் 31 ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது.
வெனிசுலா வின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு (SEZ) ஆதரவளிப்பது ,வறுமைக் குறைப்பு முயற்சி நடவடிக்கைகளுக்கு உதவுதல் மற்றும் நாட்டின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு, பொது சுகாதார அமைப்புகளை மேம்படுத்த ஒத்துழைப்பது ஆகி யவை முக்கிய ஒப்பந்தங்களாகும். 2017 ஆம் ஆண்டு வெனிசுலாவின் பொருளாதா ரத்தை முடக்கும் வகையில் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தின் மீது அமெரிக்கா பல தடைகளை விதித்தது. இதனால் வெனிசுலாவின் தேசிய வருவாய் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெனிசுலா அரசாங்கம் தாராளமய மாக்கலை பயன்படுத்தும் வகையில் ஒரு கலப்பின பொருளாதாரத் திட்டத்தை செயல்படுத்தியது, அதே நேரத்தில் எண்ணெய் அல்லாத பொருளாதார வரு வாயை அதிகரிக்கவும் முயற்சிகளை முன்னெடுத்தது. இதன் விளைவாக, ஏழு வருட நெருக்கடிக்குப் பிறகு நாட்டின் பணவீக்கம் குறைந்து சிறுகுறு நிறுவனங்கள் வளர்ந்தன. 2021 இல் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிச் சென்றது. இந்நிலையில் சீனாவுடன் ஏற்படுத்தியுள்ள இந்த ஒப்பந்தங்கள் மூலம் வறுமை ஒழிப்பை நோக்கிச் செல்வதுடன் நாட்டின் அத்தியாவசிய கட்டமைப்புகளையும் சீன உதவி யுடன் மேம்படுத்த உள்ளது வெனிசுலா.